காலியிடங்களை குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு நிரப்ப அவசியம் இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


காலியிடங்களை குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை கொண்டு நிரப்ப அவசியம் இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2018 10:21 PM GMT (Updated: 17 Aug 2018 10:21 PM GMT)

எம்.எஸ்சி. படிப்பில் காலி இடங்களை குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

ஐதராபாத்தை சேர்ந்தவர் தாண்டேக் ரோகிணி என்பவர் சென்னை பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்தார். மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததால் அவருக்கு இடம் வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாண்டேக் ரோகிணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல், ‘இளங்கலை படிப்பில் 71 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, முதுகலை படிப்பில் இடம் வழங்க முடியும். மனுதாரர் 61 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றிருப்பதால் அவருக்கு இடம் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.

அவசியம் இல்லை

அதற்கு மனுதாரர் வக்கீல், ‘கல்லூரியில் எம்.எஸ்சி. விலங்கியல் படிப்பில் பல இடங்கள் காலியாக உள்ளன. எனவே மனுதாரருக்கு இடம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘எம்.எஸ்சி. படிப்பில் பல இடங்கள் காலியாக இருக்கிறது என்பதற்காக குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்பவேண்டும் என்ற அவசியம் இல்லை. இதை அனுமதித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

Next Story