ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி புகார்


ஐஜி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் எஸ்பி  புகார்
x
தினத்தந்தி 20 Aug 2018 6:28 AM GMT (Updated: 20 Aug 2018 6:28 AM GMT)

தமிழகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

தமிழக டிஜிபி அலுவலகத்தில் பெண் எஸ்பி ஒருவர் தனக்கு ஐஜி ஒருவர் பாலியல் தொல்லை  அளிப்பதாக அளித்த புகார் தமிழ்நாடு காவல்துறையையே அதிர வைத்துள்ளது.

அதன் பிறகுதான் அந்த ஐஜி மீது பெண் எஸ்பி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அரசு துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக புதியதாக உருவாக்கப்பட்ட விஷாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

அதன்படி, ஐஜி மீது பெண் எஸ்பி அளித்துள்ள பாலியல் புகாரை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி ஆகியோரைக்கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விசாரணைக் குழுவில், ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி சரஸ்வதி, டிஜிபி அலுவலக நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோரும் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் பணியிடங்களில் பெண்கள் மீது பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி விசாரிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையில் அதிலும் ஒரு ஐஜி அதிகார எண்ணத்தில் ஒரு பெண் எஸ்பியை பாலியல் தொல்லை செய்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் எஸ்பிக்கே இந்த நிலை என்றால் கீழ்நிலை காவலர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெண் எஸ்பி அளித்த புகாரின்படி,  ஐஜி தனக்கு கீழே பணி புரியும் பெண் எஸ்பியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தனது அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். உயர் அதிகாரி ஆலோசனை நடத்த அழைக்கிறார் என்பதால் ஐஜியின் அலுவலக அறைக்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண் எஸ்பி உள்ளே சென்றதும் அந்த ஐஜி எஸ்பியை பாய்ந்து கட்டியணைக்க முயற்சி செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண் எஸ்பி ஐஜியை தள்ளிவிட்டுவிட்டு அழுதுகொண்டே வெளியே வந்துள்ளார். பின்னர், அவர் ஒரு வாரம் விடுமுறையில் சென்றுள்ளார்.

Next Story