தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு


தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2018 5:10 AM GMT (Updated: 28 Aug 2018 6:03 AM GMT)

தி.மு.க.தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்று வருகிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். அண்ணா அறிவாலயம் வளாகத்திலும் திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

பொதுக்குழு கூட்டம் துவங்கியதும், மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

இதையடுத்து, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா மற்றும் முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கோபி அன்னான் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பொதுச்செயலாளர் அன்பழகன் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக  அறிவித்தார். இதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தலைவராக அறிவிக்கப்பட்ட மு.க. ஸ்டாலின்,  அன்பழகனிடம்  வாழ்த்துப் பெற்றார்.

50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்.

திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.

திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

Next Story