எல்.இ.டி. விளக்கு டெண்டர் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்


எல்.இ.டி. விளக்கு டெண்டர் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்
x
தினத்தந்தி 31 Aug 2018 10:15 PM GMT (Updated: 31 Aug 2018 9:45 PM GMT)

எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.

சென்னை, 

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொருளற்ற புலம்பல்களுடன், நெறியற்ற அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் நேற்று வெளியிட்ட, ஸ்மார்ட் சிட்டி என்ற சீர்மிகு நகரம் பற்றிய அறிக்கை, அதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

சீர்மிகு நகரங்கள் அமைக்கும் பணிகளில் மாதங்கள் பல ஆகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் வழிமொழிந்திருக்கிறார். இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்து அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

கடந்த ஓராண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து 11 சீர்மிகு நகரத் திட்டங்களிலும், இத்திட்டப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளன. இந்திய அளவில் முதல் 20 இடங்களில் தமிழ்நாட்டின் சீர்மிகு நகரங்கள் முக்கிய இடங்களை பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும்.

சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு 33 திட்டங்கள் எடுக்கப்பட்டு, 20 பணிகள் ரூ.310 கோடியில் முடிக்கப்பட்டும், நடைபெற்றும் வருகிறது. 12 பல்வேறு திட்டங்கள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்கும் நிலையில் உள்ளது.

ஒப்பந்தப்புள்ளி

இவற்றில், நவீன முறையில் நகரம் முழுமைக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டம் குறித்து தான் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், சென்னை மாநகரில் அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியால் திறந்தவெளி மின்னணு ஒப்பந்தப்புள்ளி 22.2.2018 அன்று கோரப்பட்டது.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடைசி நாளாக 28.3.2018 அன்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியின் தொழில்நுட்ப தகுதிக்கான கூட்டம், 13.3.2018 அன்று நடத்தப்பட்டது. இதில், சுமார் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.

கெல்ட்ரான் நிறுவனம்

பின்னர், தொழில்நுட்பத் தகுதி பெற்ற மூன்று நிறுவனங்களான எல் அண்டு டி நிறுவனம், மெட்ராஸ் செக்யூரிடி பிரிண்டர்ஸ் நிறுவனம் மற்றும் கெல்ட்ரான் நிறுவனத்திற்கு அழைப்புகள் கொடுக்கப்பட்டு, 4.6.2018 அன்று இந்நிறுவனங்களின் தொழில்நுட்ப அம்சங்களை தொழில் நுட்பக்குழு மதிப்பீடு செய்தது.

அதன் பின்னரே விலைப்புள்ளிகள் திறக்கப்பட்டன. குறைந்த ஒப்பந்தப்புள்ளி விலைவிகிதம் அளித்த ஒப்பந்ததாரரான கெல்ட்ரான் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

சென்னை தவிர பிற மாநகராட்சிகளில் உள்ள 10 சீர்மிகு நகரங்களில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தும் ஒப்பந்தப்புள்ளி எல் அண்டு டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கெல்ட்ரான் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அதில். 3.9.2018 வரை இருக்கின்ற நிலையே நீடிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நிலுவையில் உள்ள வழக்கு பற்றி அறிக்கைவிடுவது, நீதிமன்ற அவமதிப்பிற்கு உள்ளாகும் என்பதை அறியாத மு.க.ஸ்டாலினின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமானதாகும்.

பினாமி நிறுவனமா?

ஒளிவு மறைவற்ற மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறையில் தேர்வு செய்யப்பட்ட, கேரள மாநில அரசு சார்ந்த நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனத்திற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அதை பினாமி நிறுவனமென என குற்றஞ்சாட்டி இருப்பது மிகுந்த உள்நோக்கம் கொண்டதாகும்.

மு.க.ஸ்டாலினின் குடும்ப உறவினர்கள் உள்ளடக்கிய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் எதிர்க்கட்சி தலைவரின் பினாமி நிறுவனங்கள் என்று குற்றம் சுமத்தினால் ஏற்றுக்கொள்ளத் தயாரா?

வெளிப்படையாக...

எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள், அமைச்சரின் பினாமிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எழுதப்படாத உத்தரவு போடப்பட்டதாக செய்திகள் வருகின்றன என்றும் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள், வெளிப்படையான ஒப்பந்த விதிமுறைகளைப் பின்பற்றியே இறுதி செய்யப்படுகிறது.

எல்.இ.டி. ஒப்பந்தப்புள்ளியில் பிலிப்ஸ், கிராம்ப்டன், ஸ்ரேட்டர், பஜாஜ், சூரியா, ஆஸ்ரம், ஹெவல்ஸ் போன்ற முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், மின்னணு ஒப்பந்தப்புள்ளி மூலம் பங்குபெற்று குறைந்த ஒப்பந்தப்புள்ளி அளித்த 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை.

உள்ளாட்சித்துறையில் நிகழ்த்தியுள்ள அரும்பெரும் சாதனைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால் மக்கள் மன்றத்தில் தனி மேடை அமைத்தோ அல்லது சட்டமன்றத்திலோ விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா?

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இந்திய அளவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். இத்தகைய அவதூறுகளை தமிழக மக்கள் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story