2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண் பரபரப்பு வாக்குமூலம்


2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Sep 2018 8:07 AM GMT (Updated: 2 Sep 2018 8:07 AM GMT)

கள்ளக்காதல் தகராறில் குழந்தைகளையே தீர்த்துக்கட்டிய கொடூர தாயின் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை,

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். அஜய், குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

விஜயின் சொந்த ஊர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஆகும். சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை கிடைத்ததால் தனது குடும்பத்துடன் மூன்றாம்கட்டளையில் உள்ள இந்த வீட்டில் குடியேறினார். கணவன்-மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த அஜய், கார்னிகா இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

விஜயின் மனைவி அபிராமி, அந்த பகுதியில் உள்ள அனைவருடனும் சிரித்து பேசி, இயல்பாக பழகியதாக தெரிகிறது. இது விஜய்க்கு பிடிக்கவில்லை. மனைவி மீது அவர் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அபிராமி, அடிக்கடி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகில் பெரியபனிச்சேரியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குன்றத்தூரில் உள்ள பிரியாணி கடைக்கு சென்று பிரியாணி சாப்பிட்டார். அப்போது அந்த கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் அபிராமிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அபிராமி, தனது குழந்தைகளை விட்டு, விட்டு எங்கோ சென்றுவிட்டார். பின்னர் அவரது பெற்றோர், அபிராமிக்கு அறிவுரைகள் கூறி மீண்டும் கணவர், குழந்தைகளுடன் சேர்ந்து வாழும்படி அறிவுறுத்தி சென்றனர்.

நேற்று முன்தினம் விஜய்க்கு பிறந்தநாள். அவர் மனைவி, குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மதியம் 12 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது அபிராமியும், தனது கணவரை இன்முகத்துடன் வழியனுப்பிவைத்தார்.

ஆனால் அதன்பிறகு கணவர் மீது ஏற்பட்ட கோபம் காரணமாக நேற்று முன்தினம் இரவு அபிராமி, ஈவு இரக்கம் இன்றி தனது குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்தார். அது விஷம் என்று தெரியாமல், பாசத்துடன் தாய் தருவதாக நினைத்து இருவரும் அதை வாங்கி அருந்தினர்.

விஷம் குடித்த குழந்தைகள் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு அபிராமி, கதவை வெளிப்புறமாக சாத்தி, தாழ்ப்பாள் போட்டு விட்டு, மொபட்டில் எங்கோ சென்றுவிட்டார். அபிராமி, அடிக்கடி இதுபோல் அருகில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று விடுவார் என்பதால் அக்கம் பக்கத்தினருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை. விஜய் வந்து பார்த்த பிறகுதான் குழந்தைகளை கொலை செய்து விட்டு, அபிராமி தப்பிச்சென்று இருப்பது தெரிந்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே அபிராமியின் கள்ளக்காதலனான சுந்தரம் போலீசில் சிக்கினார். அவனை வைத்து அபிராமியை பிடிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி சுந்தரத்தை உடன் வைத்துக் கொண்டே போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அபிராமியிடம் சுந்தரத்தை போனில் பேசவைத்து எங்கு இருக்கிறாய்? என்று கேட்க சொன்னார்கள். அப்போது அபிராமி திருவனந்தபுரத்தில் இருப்பதாக தெரிவித்தார். உடனே போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சென்றதும் சுந்தரம், அபிராமியிடம் போனில் பேசினார். நான் நாகர்கோவில் வந்துவிட்டேன். நீயும் வந்துவிடு என்று அழைத்தார். இதனை நம்பி நாகர்கோவில் வந்தபோது தான் அபிராமியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். நேற்று இரவு போலீசில் சிக்கிய அபிராமி, இன்று காலை 10 மணி அளவில் சுந்தரத்துடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

அபிராமி, சுந்தரம் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் 2 குழந்தைகளையும் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியது பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டனர்.

இதற்கு அவர்கள் அளித்த பதில்களை வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர். 2 பேரையும் இன்று நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகள் அஜய், கார்னிகா இருவரது உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தந்தை விஜயிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று இரவே குழந்தைகள் உடலும் அடக்கம் செய்யப்பட்டுவிட்டன. குழந்தைகளின் உடல் ஒப்படைக்கப்பட்ட போது அரசு ஆஸ்பத்திரியில் கூடியிருந்த உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

கொலையாளி அபிராமி மீதும், கொலைக்கு உடந்தையாக இருந்த சுந்தரம் மீதும் குழந்தைகளின் உறவினர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.  

2 குழந்தைகளை கொலை செய்த அபிராமி, போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

8 ஆண்டுகளுக்கு முன்பு நானும், விஜயும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடிபுகுந்த பின்னர் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடைக்கு குடும்பத்தோடு சென்று வந்துள்ளோம். அப்போது அங்கு பில் போடும் பணியில் இருந்த சுந்தரத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதன் பின்னர்தான் அடிக்கடி பிரியாணி வாங்கு வதற்காக சென்றேன். இதனால் எங்களுக்கிடையே நெருக்கம் அதிகமானது. கள்ளக்காதல் காரணமாக குடும்பத்தை விட்டு விலகி விட நினைத்தேன். இதற்கு சுந்தரமும் உடன்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கணவருடன் கோபித்துக் கொண்டு வெளியில் சென்ற நான், சுந்தரத்தின் வீட்டில் சென்று தங்கினேன். இதன் பின்னர் எனக்கும், கணவர் விஜய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

விஜயோடு 8 ஆண்டு குடும்பம் நடத்தியபோதிலும் சுந்தரத்துடன் 2 மாத கள்ளக் காதலை என்னால் விட முடியவில்லை. இதனால் இதற்கு என்ன வழி? என்று யோசித்தேன்.

அப்போது சுந்தரம், கணவர், குழந்தைகளை கொன்றுவிட்டு நாம் எந்த பிரச்சினையுமின்றி சந்தோ‌ஷமாக இருக்கலாம் என்று கூறினார். இதற்கு நானும் ஒத்துக் கொண்டேன்.

கடந்த 30-ந்தேதியில் இருந்தே 2 நாட்களாக கணவர், குழந்தைகளை கொலை செய்ய திட்டம் போட்டேன். 30-ந்தேதி இரவிலேயே 3 பேருக்கும் வி‌ஷ மாத்திரைகளை கலந்த பாலை கொடுத்தேன். மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் மறுநாள் (31-ந்தேதி) காலையில் கணவர் விஜயும், மகன் அஜயும் எழுந்து விட்டனர். மாத்திரையின் வீரியம் குறைவாக இருந்ததால் 2 பேரும் பிழைத்துக் கொண் டனர். ஆனால் மகள் கார்னிகா எழும்பவில்லை. அவள் 30-ந்தேதி இரவே உயிரிழந்திருப்பாள் என்று எண்ணுகிறேன்.

நேற்று முன்தினம் காலையில் கார்னிகா எழும்பாததால் அவளுக்கு முத்தம் கொடுத்து விட்டு வேலைக்கு செல்ல விஜய் சென்றார். நான், அதற்கு அனுமதிக்கவில்லை. அசந்து தூங்குகிறாள் நீங்கள் படுக்கை அறைக்கு சென்றால் விழித்துக் கொள்வாள் என்றேன். விஜயும் இதனை நம்பி வேலைக்கு சென்று விட்டார்.

இதன் பின்னர் மறுநாள் மீண்டும் மகன் அஜய்க்கு வி‌ஷம் கலந்த பாலை கொடுத்தேன். அவன் மயங்கிய பின்னர் கழுத்தை நெரித்து கொன் றேன்.

கொலை செய்துவிட்டு வெளியூருக்கு தப்பிச் செல்வதற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் தாலி செயினை அடகு வைத்து பணத்தை தயார் செய்து வைத்திருந்தேன். இந்த பணத்துடன்தான் நாகர்கோவில் சென்றேன்.

இவ்வாறு அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தைகள் கொலை வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், கள்ளக் காதலன் சுந்தரம் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப் பட்டுள்ளனர். சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

Next Story