ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்களை நிச்சயம் அனுமதிக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்களை நிச்சயம் அனுமதிக்க முடியாது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 4 Sep 2018 11:00 PM GMT (Updated: 4 Sep 2018 10:38 PM GMT)

விமான நிலையத்தில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன் இளம்பெண் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜனநாயகத்தில் இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

சென்னை,

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதற்கும் இடம், பொருள், ஏவல் என்று உள்ளது. விமான நிலையம் என்பது பொதுவான மத்திய அரசுக்கு உட்பட்ட இடம். அந்த இடத்தில் கோஷமிடுவதையோ, ஜனநாயகத்திற்கு விரோதமாக நடப்பதையோ நிச்சயமாக ஜனநாயகவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

இந்தவொரு போக்கை அனுமதித்தோம் என்றால் நாளைக்கு எந்தவொரு தலைவரும் ரெயில் நிலையம் போகமுடியாது. விமான நிலையம் போகமுடியாது. இது எல்லாக் கட்சி தலைவர்களுக்கும் பாதுகாப்பு பிரச்சினையாக வந்து முடியும்.

இதுபோன்ற செயல்களை ஜனநாயகத்தில் நிச்சயம் அனுமதிக்க முடியாது. கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக விமானத்திற்குள் சென்று ஒழிக என்று சொல்ல முடியுமா?. அதை எப்படி அனுமதிக்க முடியும்?. எதுக்குமே ஒரு சரியான நேரம், சரியான இடம் என்று இருக்கிறது.

எந்த கட்சியாக இருந்தாலும் போராடுவதற்கு உரிமை உண்டு. மக்கள் தான் எல்லாவற்றுக்கும் நீதிபதிகள். அவர்கள் தான் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே, ஒவ்வொரு ஆட்சியின் செயல்பாடுகளையும் அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். யாரை அரியணையில் ஏற்ற வேண்டும், யாரை அரியணையில் ஏற்றக்கூடாது என்பது அவர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் அவரிடம், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.க. என்பது மாபெரும் இயக்கம். இந்த இயக்கத்தை 10 ஆயிரம் தினகரன்கள் ஒன்று கூடினாலும் ஒன்றும் செய்ய முடியாது. விரக்தியின் உச்சகட்டத்தில் அவர் இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே முதல்-அமைச்சராக வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியோடு அன்றைக்கு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு வெளிநாட்டில் உள்ள ஒரு ஓட்டல் வழக்கில் இருந்து இவர் விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதா அவரை விரட்டியடித்தார். அதன் பிறகு சேர்க்கவில்லை. இப்படி அவருடைய வரலாறு இருக்கிறது. எல்லாருமே ஒதுக்கித் தள்ளும் நிலையில், இன்றைக்கு எந்தவொரு ஆதரவும் தமிழ்நாட்டில் இல்லாத நிலையில், வேதனையின், விரக்தியின் உச்சகட்டமாகத்தான் அவரது பேச்சு இருக்கிறது” என்றார்.

Next Story