குட்கா ஊழல் வழக்கு: தமிழகத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை


குட்கா ஊழல் வழக்கு: தமிழகத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை
x
தினத்தந்தி 5 Sep 2018 5:03 AM GMT (Updated: 5 Sep 2018 5:47 AM GMT)

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தமிழகத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. #Gudkascamcase

சென்னை

சென்னை செங்குன்றத்தில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்பராக் போன்ற போதைப்பொருட்கள் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மேலும் குட்கா மற்றும் பான்பராக் விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அந்த சோதனையின்போது, ரகசிய டைரி ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டெடுத்தனர். அந்த டைரியில் குட்கா விற்பனையில் வரி ஏய்ப்பு செய்வதற்கு அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடந்தையாக செயல்பட்ட தகவல்கள் இருந்தன.

மத்திய கலால் வரித்துறை, தமிழக உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை, போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ரூ.47 கோடி வரை மாமூல் கொடுக்கப்பட்டதாக ரகசிய டைரியில் தகவல் எழுதப்பட்டு இருந்தது.

குட்கா ஊழல் வழக்கில்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். குட்கா விற்பனைக்கு மாமூல் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி டெல்லி சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் குட்கா ஊழல் பிரச்சினை தொடர்பாக கடந்த மே மாதம் வழக்குப்பதிவு செய்தார். வழக்குப்பதிவு செய்தவுடன் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த வழக்கு விவரங்களை சி.பி.ஐ. போலீசார் முதல்கட்டமாக கேட்டு அறிந்தனர்.

பின்னர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 8 பேர் சென்னையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். குட்கா ஊழல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் பெயர் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வந்தனர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கடந்த ஜூன் 22 ந்தேதி சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு டெல்லியில் இருந்து வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர்.

உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குட்கா ஊழல் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

இதேபோல் பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை சேகரித்தனர்.

கடந்தவாரம்  குட்கா அதிபர் மாதவராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று  தமிழகத்தில் முன்னாள்  போலீஸ் கமிஷனர் ஜார்ஜின் முகப்பேர்  நொளம்பூர்  வீடு உள்பட 40 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் 100க்கும்  மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி நிறுவனர் வீடு, சுகாதாரத்துறை அமைச்சர் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

Next Story