ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்


ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Sep 2018 11:30 PM GMT (Updated: 8 Sep 2018 10:46 PM GMT)

ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் வருகிற 15-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள தி.மு.க.வின் முப்பெரும் விழா உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு, மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. உள்பட மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* பா.ஜனதா அரசை விமர்சிக்கும் தொலைக்காட்சிகள் மிரட்டப்பட்டு, பத்திரிகை ஆசிரியர்கள் நீக்கப்பட்டு, ஓர் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை உருவாக்கி, மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் போராடி பெற்றுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டை நீர்த்துபோக செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு சவாலாக தேர்தல் பின்னணி கொண்ட சர்வாதிகாரத்தை நிறுவி, கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. என சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகள் அனைத்தும் பா.ஜனதாவின் கைப்பாவையாக மாற்றப்பட்டு விட்டன.

* மதவெறி பிரசாரங்கள் மூலமாகவும், அ.தி.மு.க அரசின் அதிகாரங்களை பயன்படுத்தியும், திராவிட இயக்க சிந்தனை மற்றும் மதவெறிக்கு மாற்றுச் சிந்தனை கொண்டோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடலாம் என்ற பா.ஜ.க.வின் கனவு நனவாக, தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது. அதேபோல, உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் என்ன விலை கொடுத்தேனும் ஒருசேரப் போற்றிப் பாதுகாத்திட தி.மு.க. உறுதி பூண்டுள்ளது. பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட தேவையான செயல் திட்டங்களையும், களப்பணிகளையும், வகுத்தும், தொகுத்தும் அவற்றைத் தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல இந்தக் கூட்டம் தீர்மானித்துச் சபதமேற்கிறது.

* “ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும், திண்ணையிலும் மக்களை நேரடியாக சந்தித்து, மாநில வளர்ச்சியை 20 வருடங்களுக்கு பின்னால் இழுத்துக்கொண்டு போய்விட்ட, மக்கள் விரோத ஜனநாயக விரோத அ.தி.மு.க அரசின் அடுக்கடுக்கான தோல்விகளை எடுத்து விளக்கி, அவர்களை வீட்டுக்கு அனுப்ப, தி.மு.க.வின் பட்டாள சிப்பாய்களாக களம் இறங்கி நாள்தோறும் காரியமாற்றுவதென திடசித்தத்துடன் தீர்மானிக்கிறது.

* வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடர்பாக அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பினை, முறையாகவும் கட்டாயமாகவும் பயன்படுத்திக்கொண்டு, மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தங்களின் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சரி பார்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் பெயர் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளில், மிகுந்த கவனத்துடன் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளில், ஆளுங்கட்சியினர், போலி வாக்காளர்களை புகுத்தவும், பாரம்பரியமான தி.மு.க. வாக்காளர்களை நீக்கவும் முயற்சி செய்வதாக பல இடங்களிலிருந்தும் தகவல்கள் வருகின்றன. அவ்வாறு நடைபெறும் அத்துமீறல்களை சட்டவிரோத செயல்களை பற்றி, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார்களை கொடுத்து உரிய நிவாரணம் பெற்றிட வேண்டும். மேலும் அப்படி புகார் கொடுத்த விவரங்களை கட்சியின் தேர்தல் பணிக்குழுவிற்கும், தலைமை கழகத்திற்கும் அவ்வப்போது மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும்.

* கடைமடை பகுதிகளுக்கு மேலும் தாமதமின்றி, காவிரி நீர் முறைப்படி செல்லவும், வருங்காலத்தில் காவிரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தவும், அ.தி.மு.க அரசு ஆக்கபூர்வமான செயல் திட்டங்களை விரைந்து வகுத்து, நடைமுறைப்படுத்திடவேண்டும் என இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

* சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், உடனடியாக அ.தி.மு.க அரசு, அரசியல் சட்டப் பிரிவு 161-ன்கீழ் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 7 பேரையும் விடுதலை செய்திடும் வகையில் அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி, தமிழக கவர்னருக்கு அனுப்பிடவேண்டும். மேலும் அமைச்சரவையின் அந்தத் தீர்மானத்தின் மீது, தாமதமின்றி நடவடிக்கை எடுத்து, 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக கவர்னர் ஆணை பிறப்பித்திடவேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

* பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில், செப்டம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்து மனப்பூர்வமாக ஒத்துழைப்பதென தி.மு.க. சார்பில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த முழு அடைப்பு போராட்டம் முழுமையான வெற்றி பெற்றிடும் வகையில், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், தாய்மார்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தன்னார்வத்துடன் பங்கேற்று, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு தக்க பாடம் புகட்டிட முன்வரவேண்டும்.

* குட்கா அதிபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆரம்ப கட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ள பிறகும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யாமல் ஒட்டிக் கொண்டிருப்பது தமிழகத்திற்குப் பெரிய தலைகுனிவு. எனவே அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்தும், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை உடனடியாக பதவியில் இருந்து விடுவித்தும் உத்தரவிட்டு நியாயமான விசாரணைக்கு வழிவகுத்திடவேண்டும். இந்த அசாதாரண நிகழ்வை கவர்னர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம்.

* மத்திய வருமானவரி துறை ஆய்வின் மூலம் முதல்-அமைச்சரின் சம்பந்தி தொடர்பான மிகப்பெரிய அளவில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள ஊழல்கள் துணை முதல்-அமைச்சரின் உறவினர்கள் வெளிநாடுகளில் செய்திருக்கும் முதலீடு குட்கா ஊழலில் தமிழக டி.ஜி.பி. உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருடைய தொடர்பு மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏறத்தாழ ரூ. 7 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பது உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுத்து பொதுவெளியில் வந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இந்த ஊழல் அரசின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-9-2018 செவ்வாய்கிழமையன்று காலை 10 மணி அளவில் தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்த கூட்டம் முடிவு செய்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story