காசிமேடு கடற்கரையில் மாயமான 10 வயது சிறுமி பிணமாக மீட்பு


காசிமேடு கடற்கரையில் மாயமான 10 வயது சிறுமி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 8 Sep 2018 10:56 PM GMT (Updated: 8 Sep 2018 10:56 PM GMT)

காசிமேடு பகுதியில் மாயமான 10 வயது சிறுமி, கடற்கரையில் பிணமாக மீட்கப்பட்டாள். எல்லை பிரச்சினையால் புகாரை வாங்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராயபுரம்,

சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். மீனவர். இவருடைய மனைவி மாலினி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களது இளைய மகள் ஜெசிகா(வயது 10). இவள் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சமயபுரத்து அம்மன் கோவில் திருவிழாவில் சிறுமி ஜெசிகாவின் சித்தி அலகு குத்திக்கொண்டார். இதற்காக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இறால் ஏலமிடும் பகுதியில் உள்ள கடற்கரையில் நடந்த கங்கை திரட்டு நிகழ்ச்சியில் பிரகாஷ், தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார்.

அப்போது சிறுமி ஜெசிகா, தனது தாயிடம் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டுச்சென்றாள். அதன்பிறகு இரவு 8 மணி அளவில் பிரகாஷ் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பி வந்தார். ஆனால் அங்கு சிறுமி ஜெசிகா இல்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் சிறுமியை தேடினார்கள். ஆனால் எங்கேயும் ஜெசிகாவை காணவில்லை. அவள் மாயமாகிவிட்டது தெரிந்தது.

இது குறித்து காசிமேடு போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார், சம்பவம் நடந்த பகுதி தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று கூறினர். இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் செய்தனர். அவர்களும் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி புகாரை வாங்கவில்லை.

இதனால் அலைக்கழிக்கப்பட்ட உறவினர்கள் பதற்றம் அடைந்தனர். அதன்பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் புகாரை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் உறவினர்களே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காசிமேடு கடற்கரை மணல் பரப்பில் சிறுமி ஜெசிகா மயங்கிய நிலையில் கிடந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவளை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமி ஜெசிகாவை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சிறுமி மாயமானதும் புகாரை உடனே வாங்காமல் அலைக்கழித்த போலீசாரை கண்டித்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் காசிமேடு சூரியநாராயணன் தோட்டம் சிக்னல் அருகே சிறுமியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ரவாளி பிரியா மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், சிறுமி சாவில் மர்மம் உள்ளது. போலீசார் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி புகாரை வாங்காமல் அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

இது குறித்து சிறுமியின் உறவினர்கள் கூறியதாவது:- கோவில் திருவிழாவில் இருந்து வீட்டுக்குச்சென்ற ஜெசிகா, கடற்கரையில் பிணமாக கிடந்தாள். அவள் மீது மணல்கள் கிடந்தன. முகத்தில் கீறல்கள் இருந்தன. வீட்டில் இருந்த அவள், எப்படி கடற்கரையில் பிணமாக கிடந்தாள்? என்பது மர்மமாக உள்ளது. அவளை யாராவது கடத்திச்சென்று கொலை செய்து விட்டு, உடலை கடற்கரை மணலில் வீசி இருப்பார்களோ? என்ற சந்தேகம் உள்ளது.

முதலில் நாங்கள் தேடியபோது கடற்கரையில் அவள் பிணமாக கிடக்கவில்லை. போலீசில் புகார் அளித்தபிறகு மீண்டும் தேடியபோதுதான் அங்கு பிணமாக கிடந்தாள். கடலில் விழுந்து அவள் இறந்திருக்க வாய்ப்பு இல்லை. அவளது உடல் தண்ணீரால் நனையாமல் இருந்தது. போலீசார் உடனடியாக புகாரை வாங்கி இருந்தால் அவளை மீட்டு இருக்கலாம். ஆனால் போலீசார் எங்களை அலைக்கழித்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுபற்றி போலீசார் கூறும்போது, “சிறுமிக்கு வலிப்பு நோய் இருந்து உள்ளது. தற்போது சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்தபிறகுதான், அவள் வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்தாளா? அல்லது பாலியல் கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு கிடந்தாளா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவரும்” என்றனர்.

Next Story