வகுப்புகளில் ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் + "||" + Teachers in classes Watching Whats app Heavy action will be taken
வகுப்புகளில் ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
வகுப்புகளில் ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரும் கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ‘அடல் லேப் திட்டம்’ தொடங்கப்படும். இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் ‘கியூஆர்’ கோடு மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்கி உள்ளனர்.
மேலும் பள்ளிக்கூடத்தில் வகுப்பு நேரங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் தங்களுடைய செல்போனில் வாட்ஸ்-அப் பார்த்துக்கொண்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளது. ஆனால் புகார்கள் எதுவும் வரவில்லை. ஆசிரியர்கள் வாட்ஸ்-அப் பயன்படுத்துவது குறித்து புகார்கள் தெரிவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி அருகே உள்ள எலத்தூர் அரசு பள்ளியில் மாணவர்களை கொண்டு பள்ளியை சுத்தம் செய்த சம்பவம் நடந்தது. இதேபோல் தாராபுரத்திலும் ஒரு பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி அரசு பள்ளியில் நடந்தால், கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். எலத்தூரில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் சில தினங்களில் இடமாற்றம் செய்யப்படுவார்.
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கல்வித்துறை பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது. மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் உடனடியாக கிடைக்க போக்குவரத்து அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
பின்னர் ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 412 இடங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரு தொகுதியில் ஒன்று அல்லது 2 இடங்களில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு மாணவ -மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் குழந்தைகளுக்கான ‘மாடல் ஸ்கூல்’ (மாதிரி பள்ளி) தொடங்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் ‘மாடல் ஸ்கூல்’ தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.