கல்லிடைக்குறிச்சி கோவிலில் திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிப்பு


கல்லிடைக்குறிச்சி கோவிலில் திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Sep 2018 11:59 PM GMT (Updated: 9 Sep 2018 11:59 PM GMT)

கல்லிடைக்குறிச்சி கோவிலில் திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிப்பு ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை,

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது ஆகும். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 5.7.1982 அன்று மிகப்பெரிய அளவில் சிலைகள் திருட்டுபோன சம்பவம் நடந்தன.

நடராஜர் சன்னதியின் இரும்பு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய்விட்டதாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 600 வருடங்கள் பழமையான 2½ அடி உயரமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை, 2 அடி உயரமுள்ள ஐம்பொன் சிவகாமி அம்மன் சிலை, 1½ அடி உயரமுள்ள ஐம்பொன் மாணிக்கவாசகர் சிலை, 1 அடி உயரமுள்ள ஐம்பொன் ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகள் திருட்டுபோனதாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த 4 ஐம்பொன் சிலைகளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையவை ஆகும். கடந்த 36 வருடங்களாக விசாரணை நடத்தியும் இந்த சிலை திருட்டு வழக்கில் கல்லிடைக்குறிச்சி போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. வழக்கு விசாரணையை கைவிட்டு விட்டனர்.

இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 1½ ஆண்டுகளாக, இந்த சிலை திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணையில் திருட்டுபோன ஐம்பொன் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலையை கடத்தி சென்ற திருட்டு கும்பல் ஆஸ்திரேலியாவில் அச்சிலையை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

திருட்டு போனதில் ஒரு சிலை மட்டும் (நடராஜர்) ரூ.30 கோடி மதிப்புடையது ஆகும். இந்த சிலை உள்பட 8 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த வழக்கை கல்லிடைக்குறிச்சி போலீஸ் விசாரணையில் இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story