மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவோம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேச்சு


மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவோம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேச்சு
x
தினத்தந்தி 10 Sep 2018 10:15 PM GMT (Updated: 10 Sep 2018 8:05 PM GMT)

மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும், மாநிலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என திருநாவுக்கரசர் பேசினார்.

சென்னை, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் தணிகாசலம், ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. சட்டப்பிரிவு செயலாளர் வக்கீல் கிரிராஜன், ம.தி.மு.க. துணைபொதுச் செயலாளர் மல்லை சத்யா, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் எம்.ஏ.சுந்தரேசன், திராவிடர் கழகத்தை சேர்ந்த குமரேசன், அகில இந்திய முஸ்லிம் லீக் முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி தேசியக்குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் உமர் பாரூக் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

அனைத்து கட்சி சார்பில் ‘பாரத் பந்த்’ வெற்றிகரமாக நடந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை எட்டும் வகையில் தினசரி 30 காசுகள், 50 காசுகள் என்ற விகிதத்தில் உயர்ந்துவருகிறது. இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டைநாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. இந்தியாவிலும் 35 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய பெட்ரோல், டீசல் 2 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் 140 டாலராக இருந்தது, தற்போது 65 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் இந்த பயனை மக்கள் அடையாமல் எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் பயன் அடைந்து வருகின்றன. இதன்மூலம் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் பொதுமக்களிடம் இருந்து சுரண்டப்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜனதா பினாமி ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. எனவே, மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையிலும், மாநிலத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மாற்றம் கொண்டுவருவோம். அதற்கு அஸ்திவாரமே இந்த பந்த்.

இவ்வாறு அவர் பேசினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் தலைமையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென்று சாலைமறியல் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்பட மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பாராட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று அதை வெற்றிபெற செய்த அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தாம்பரம் சண்முகம் சாலை மார்க்கெட் பகுதிகளில் காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தேவா அருள் பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், மனித நேய மக்கள் கட்சினர் உள்பட ஏராளமான தோழமை கட்சினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விறகு அடுப்பு வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தும், தள்ளு வண்டியில் இருசக்கர வாகனத்தை ஏற்றி ஊர்வலமாக சென்றும், மாட்டுவண்டியில் அமர்ந்து சென்றும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story