தொடர் விலை ஏற்றம்: பெட்ரோல் 14 காசு; டீசல் 12 காசு உயர்வு வாகன ஓட்டிகள் கலக்கம்


தொடர் விலை ஏற்றம்: பெட்ரோல் 14 காசு; டீசல் 12 காசு உயர்வு வாகன ஓட்டிகள் கலக்கம்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 9:18 PM GMT)

பெட்ரோல் விலையில் 14 காசும், டீசல் விலையில் 12 காசும் நேற்று அதிகரித்தது.

சென்னை, 

பெட்ரோல் விலையில் 14 காசும், டீசல் விலையில் 12 காசும் நேற்று அதிகரித்தது. தொடர் விலையேற்றம் காரணமாக வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. பெட்ரோல் விலையை போல வாகன ஓட்டிகளின் வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அந்தவகையில் நேற்றும் பெட்ரோல்-டீசல் விலை வழக்கம்போல அதிகரித்து நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 05 காசுகள் என விற்பனை ஆனது. இந்தநிலையில் முந்தைய நாள் விலையை காட்டிலும் நேற்று 14 காசுகள் உயர்ந்து, 84 ரூபாய் 19 காசுகள் என பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.

பெட்ரோலை போலவே டீசலின் விலையும் அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் டீசல் 77 ரூபாய் 13 காசுகள் என விற்பனை ஆனது. முந்தைய நாளை விட நேற்று டீசலின் விலை 12 காசுகள் உயர்ந்து, 77 ரூபாய் 25 காசுகள் என டீசல் விற்பனை ஆனது.

இம்மாதம் 1-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.77-க்கும், டீசல் ரூ.74.42-க்கும் விற்பனை ஆனது. அந்தவகையில் இம்மாதம் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.2.42-ம், டீசல் விலையில் ரூ.2.83-ம் அதிகரித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “பெட்ரோல்-டீசல் விலை உயர்வு எங்களை ஒவ்வொரு நாளும் வாட்டி வதைக்கிறது. இன்றைய தினம் விலை எப்படி இருக்குமோ... என்ற அச்சத்துடனே வாகனங்களை வீட்டில் இருந்து எடுக்கவேண்டியது உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை குறையாமல் போனால் பஸ் பயணத்துக்கு மாறவேண்டியது தான்...”, என்றனர்.

Next Story