2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 9:35 PM GMT)

2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்- மனைவி தற்கொலை செய்துகொண்டனர்.

விக்கிரமசிங்கபுரம்,

2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன்- மனைவி தற்கொலை செய்துகொண்டனர். வீட்டில் இருந்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 38). இவருக்கும், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பாவை சேர்ந்த ரேவதிக்கும் (28) 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதிர்வேல் (7) என்ற மகனும், அஸ்மிதா (3) என்ற மகளும் இருந்தனர்.

மகேந்திரன் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக 15 நாட்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளுடன் சிவந்திபுரம் கஸ்பாவுக்கு வந்தார்.

அங்கு மாமியார் வீட்டுக்கு அருகே உள்ள மற்றொரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். கதிர்வேல் தினமும் காலையில் எழுந்ததும் தனது பாட்டி பிச்சம்மாளை பார்க்க செல்வான். ஆனால் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அவன் வராததால் பிச்சம்மாள் தனது பேரனை பார்க்க சென்றார். அப்போது அங்கு மகேந்திரன், ரேவதி, குழந்தைகள் கதிர்வேல், அஸ்மிதா ஆகிய 4 பேரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

தகவல் கிடைத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 4 பேரின் உடல் அருகில் ஒரு டம்ளரில் பால் இருந்தது. எனவே, பாலில் விஷம் கலந்து கொடுத்து குழந்தைகளை கொன்றுவிட்டு, கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்ததாக தெரிகிறது.

மகேந்திரன் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டதாலேயே அவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அஸ்மிதாவுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள். இதை குடும்பத்தினர் வீட்டில் கேசரி செய்து சாப்பிட்டு கொண்டாடி உள்ளனர்.

இரவில் வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்த அவர்கள் அதன்பின்னர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வீட்டில் நடத்திய சோதனையில், மகேந்திரன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நான் பிழைக்கப்போவதில்லை. என்னை பிரிந்து எனது மனைவியும் வாழமாட்டாள். இதனால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கிறோம் என்று எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story