எடப்பாடி பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு


எடப்பாடி பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 13 Sep 2018 10:22 PM GMT (Updated: 13 Sep 2018 10:22 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென சந்தித்து பேசினார்.

சென்னை, 

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 22-ந்தேதி கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதற்காக அவரை சந்தித்து பேசினேன். அதோடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் திட்டங்கள் குறித்தும் பேசினேன்.

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி கவர்னர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார். தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி சேர தம்பித்துரை எம்.பி. முயற்சி எடுக்கிறாரா? என தெரியவில்லை.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

பின்னர் அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க., அ.ம.மு.க. உள்பட எந்த ஒரு கட்சிக்கும் பிரதமரை தேர்வு செய்ய அருகதை கிடையாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தற்போதுள்ள இடங்களைவிட அதிகமான இடங்களை கைப்பற்றி, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி நிச்சயமாக உருவாகும்.

கூண்டிற்கு பின்னால் நின்று பேசுபவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. விஜய்மல்லையா விவகாரத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெளிவாக கூறியுள்ளார். கொலை குற்றவாளிகூட தான் நிரபராதி என்று போறபோக்கில் என்னவேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகலாம். இதற்கெல்லாம் எந்த அரசாங்கமும், தனிநபரும் பொறுப்பு ஏற்கமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story