புழல் சிறையில் சொகுசு வசதியுடன் கூடிய அறைகள் ; 18 டிவிக்கள் பறிமுதல்


புழல் சிறையில் சொகுசு வசதியுடன் கூடிய அறைகள் ;  18 டிவிக்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 14 Sep 2018 5:10 AM GMT (Updated: 14 Sep 2018 5:10 AM GMT)

புழல் சிறையில் சொகுசு வசதியுடன் கூடிய படுக்கை அறைகள், செல்போன், விதவிதமான உணவு என உல்லாச விடுதியாக மாற்றிய கைதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றம், 

புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கான சிறை, விசாரணை கைதிகளுக்கான சிறை, பெண்கள் சிறை என உள்ளன. தற்போது தண்டனை கைதிகளுக்கான சிறையில் 750-க்கும் மேற்பட்டோரும், விசாரணை கைதி சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.



புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்டவை கிடைக்க உடந்தையாக இருந்த சிறை காவலர்கள் கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

கைதிகள் ஜாமீனில் வெளியில் செல்வதற்கு ரூ.25 ஆயிரம் வரை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் கைதிகளின் உறவினர்கள் புகார் கூறி வருகிறார்கள். கஞ்சா, செல்போன்களை கைதிகளிடம் கொண்டுசேர்ப்பதற்கும் பல்லாயிரக்கணக்கில் பணம் புழங்கி வருவதாக கூறப்படுகிறது.



இதுபற்றி அறிந்த மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து, சிறையில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி விளக்கம் கேட்டு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள சிறைகளில் சோதனை நடத்தப்பட்டு கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது தண்டனை கைதிகளுக்கான சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த கைதி ஒருவரும், மதுரை கைதிகள் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் 3 பேரும் சிறைக்குள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

வண்ணமயமான திரைச் சீலைகள் தொங்கவிடப்பட்டு சொகுசு வசதியுடன் கூடிய படுக்கை அறைகள், அதில் மெத்தை, தலையணைகளுடன் கூடிய கட்டில்கள் என உல்லாச விடுதியாகவே சிறையை மாற்றி உள்ளனர். கைதிகளுக்கான ஆடையை அணியாமல் இவர்கள் சுற்றுலா செல்வதுபோல பல வண்ண நாகரிக உடைகளை அணிந்தும், காலில் ஷூ அணிந்தும் சிறைக்குள் வலம் வருகின்றனர்.



கருப்புநிற கண்ணாடி அணிந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தும், செல்பி எடுத்தும் உற்சாகமாக இருப்பது இந்த புகைப்படங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்களில் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதி ஒருவர் உற்சாகமாக அமர்ந்து போஸ் கொடுக்கிறார். இன்னொரு கைதி ஜாலியாக நடந்து செல்கிறார். மற்றொரு கைதி ஜிப்பா அணிந்தபடி 2 கைகளையும் நீட்டி போஸ் கொடுக்கிறார்.

‘ஹாட்பாக்ஸ்’களில் வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட வடை, தோசை என விதவிதமான சூடான உணவுகள் அறையில் வைக்கப்பட்டுள்ளன. சிறை அதிகாரிகள் துணையோடு பிரபல ஓட்டல்களில் இருந்து சுவையான உணவுகள் வாங்கி அருந்துவது தெரிகிறது.

சிறையில் உள்ள முக்கிய குற்றவாளிகள், சர்வதேச குற்றங்கள் புரிந்த கைதிகள் சிலர் தங்களது செல்போன்களை பயன்படுத்தி வெளிநாட்டு கடத்தல் கும்பலுடனும், தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுடனும் தொடர்பில் இருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

தற்போது 250 கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் அறைகளில் டி.வி. உள்ளிட்ட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புழல் சிறையில் 24 உயர்மட்ட அறைகளில்  டிஐஜி முருகேசன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கைதிகளின் அறையில் 18 டிவிகள், எப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story