திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள்: மு.க அழகிரி
திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என அவர்களிடம் கேளுங்கள் என்று மு.க அழகிரி தெரிவித்தார்.
மதுரை,
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி மீண்டும் கட்சியில் இணைய விரும்பினார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை கட்சி தலைமை கண்டுகொள்ளவில்லை. அத்துடன் கட்சி தலைமை பதவியும் மு.க ஸ்டாலின் வசம் வந்தது. இதனை அடுத்து மு.க.அழகிரி சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார்.
இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து தெரிவித்தார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார். கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து என அழகிரி தெரிவித்தார்.
இந்த நிலையில், மு.க அழகிரியிடம் திமுகவில் மீண்டும் சேர்க்க மறுப்பது குறித்து செய்தியாளர்கள் அழகிரியிடம் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த மு.க அழகிரி, திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள் என பதிலளித்துவிட்டு சென்றார்.
Related Tags :
Next Story