செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு - நெல்லை ஆட்சியர் சில்பா அறிவிப்பு


செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு - நெல்லை ஆட்சியர் சில்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2018 8:11 AM GMT (Updated: 14 Sep 2018 8:11 AM GMT)

செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் சில்பா அறிவித்துள்ளார்.

நெல்லை,

விநாயகர் சதுர்த்தியையொட்டி நெல்லை மாவட்டம் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. நேற்று இரவில் செங்கோட்டை மேலூர் பகுதியில் வீர விநாயகர் சிலை உள்ளிட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓம்காளி திடலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அந்த சிலைகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக் கும் பகுதி வழியாக செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் உருவானது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள், ஏ.டி.எம். மைய முன் பகுதி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி கலவரமாக காட்சி அளித்தது.

இருதரப்பினர் மோதல் குறித்து உடனடியாக செங்கோட்டை போலீசுக்கும், மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினார்கள். அதன்படி அவர்கள் கலைந்து சென்றனர். இருந்தபோதும், அங்கு பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். அவர்கள் ரோந்து சென்று அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

144 தடை உத்தரவு

இந்த நிலையில், செங்கோட்டை தாலுகாவில் தற்போது முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் சில்பா  ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார். 

Next Story