வெளிநாட்டில் பட்டம் பெற்ற வாலிபர் தற்கொலை


வெளிநாட்டில் பட்டம் பெற்ற வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Sep 2018 9:15 PM GMT (Updated: 14 Sep 2018 7:34 PM GMT)

வெளிநாட்டில் பட்டம் பெற்ற வாலிபர் தற்கொலை

பூந்தமல்லி, 

லண்டனில் எம்.பி.ஏ. படித்துவிட்டு சென்னையில் தகுதியான வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை போரூரை அடுத்த லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 35). இவர், லண்டனில் எம்.பி.ஏ. படித்து முடித்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சந்தோஷ், தனது அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை தட்டி பார்த்தனர்.

நீண்டநேரம் தட்டியும் அவர் கதவை திறக்காததால் பதற்றம் அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அறையில் தங்கள் மகன் சந்தோஷ், பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரிந்தது. மகனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார், தற்கொலை செய்துகொண்ட சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், லண்டனில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து முடித்த சந்தோசுக்கு, சென்னையில் அவர் படிப்புக்கேற்ற தகுதியான வேலை கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. எனினும் அவரது தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? எனவும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story