மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையின் காரணத்தால், மின் பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில வாரங்களா கவே தமிழ்நாடு முழுவதும் பல மணி நேரங்கள் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களை வெகுவாக பாதிப் படைய செய்திருக்கிறது. இதற்கு பராமரிப்பு பணி களே காரணம் என அதிகாரிகளை வைத்து விளக்கம் கொடுத்தாலும், இது திட்டமிடப்பட்ட ஆனால், வெளிப்படையாக அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பதே உண்மை.
இந்த பிரச்சினை தற்போது பூதாகரமாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய நிலக்கரி கையிருப்பானது மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும், தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்காவிட்டால் சில அனல் மின் நிலையங்களை மூடும் சூழல் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைக்கு யார் காரணம்?.
ஜெயலலிதா ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், தற்போதைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையின் காரணத்தால், தனது தினசரி தேவையைவிட 2,500 மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. டாஸ்மாக் துறையின்மேல் அமைச்சருக்கு இருக்கும் அக்கறையை, மின்துறையின் மீதும் சிறிது கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு அசாதாரணமான சூழலும், மத்திய அரசிடம் தமிழகம் கையேந்தும் நிலையும் ஏற்பட்டிருக்காமல் தவிர்த்திருக்கலாம்.
எடப்பாடியின் அரசு ஆளும் மத்திய அரசிற்கு அடிமையாக இருக்கிறது என்ற விமர்சனம் வரும்போதெல்லாம், நாங்கள் மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோம் என்று சொல்லி வந்தார்கள். தற்போது தமிழகம் இருளில் மூழ்கும் நிலைக்கு செல்வதை பார்த்தால் எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் இணக்கமாக அல்லாமல், சொந்த தேவைகளுக்காக அடிமைகளாக இருந்து வந்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story