தி.மு.க. தலைமையில் ம.தி.மு.க. அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் ஈரோடு மாநாட்டில் தீர்மானம்


தி.மு.க. தலைமையில் ம.தி.மு.க. அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் ஈரோடு மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:30 PM GMT (Updated: 15 Sep 2018 7:38 PM GMT)

பா.ஜ.க., அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் அணிசேர்ந்து ம.தி.மு.க. தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என்று ஈரோடு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு,

ம.தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, கட்சி வெள்ளி விழா, பொதுச்செயலாளர் வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ம.தி.மு.க.வின் மாநில மாநாடாக ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். மல்லை சத்யா வரவேற்றார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மஜித்மெமன், மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்-மந்திரி பேராசிரியர் ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், நடிகர் சத்யராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இறுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஏற்புரையாற்றி பேசினார். முன்னதாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* மக்கள் ஆட்சித் தத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அ.தி.மு.க. அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு தி.மு.க. தலைமையில், கூட்டணி கட்சிகளுடன் அணிசேர்ந்து, ம.தி.மு.க. தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும்.

* 69 சதவீத இடஒதுக் கீட்டை பாதுகாப்பதற்கு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் பிற்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

* பொதுவாழ்வில் பொன்விழா கண்ட கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதுடன், பொது வாழ்வில் நூறாண்டு கண்டு, திராவிட இயக்கத்திற்கு அவரது தூயதொண்டு தொடர வேண்டும் என்று இந்த மாநாடு வாழ்த்துகிறது.

* தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களும் வாக்களிக்க வகைசெய்ய வேண்டும்.

* காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய சட்டப்பொறுப்பை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

* கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.

* அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

* முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு வழக்கை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

* மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களை கைவிட்டு, மத்திய அரசு காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

* தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு பணிகளை தொடங்கினால், மக்கள் அறப்போர் கிளர்ச்சி வெடிக்கும்.

* தமிழக அரசு 7 மாவட்டங்களில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் ‘கெயில்’ நிறுவனத்தின் திட்டத்திற்கு துணைபோகக் கூடாது.

* கேரள மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்திற்கான ஒப்புதலைப் பெற்று பணிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

* சேலம்-சென்னை பசுமைவழி சாலைத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முனைவதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இத்திட்டத்தை கைவிட வேண்டும்.

* அ.தி.மு.க. அரசின் அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அதனை கைவிட வேண்டும்.

* முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் ஊழல் விசாரணை நடத்துவதற்கு ஏற்ற வகையில் லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்.

* உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு ஆணை வெளியிட வேண்டும்.

* மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும்.

இவை உள்பட 35 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தும் ம.தி. மு.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story