கூட்டுறவு சங்க 2-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 11-ந் தேதி நடக்கிறது தேர்தல் ஆணையர் அறிவிப்பு


கூட்டுறவு சங்க 2-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 11-ந் தேதி நடக்கிறது தேர்தல் ஆணையர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sep 2018 9:00 PM GMT (Updated: 15 Sep 2018 7:44 PM GMT)

கூட்டுறவு சங்கங்களின் 2-ம் கட்ட தேர்தல் அக்டோபர் 11-ந் தேதி நடைபெறுகிறது.

சென்னை, 

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்து தொடக்கநிலை சங்கங்களின் தேர்தல் கடந்த 7-ந் தேதி நடத்தப்பட்டு புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்றுள்ளனர். தற்போது 2-ம் கட்டமாக 113 வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், 12 மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையங்கள், 14 மாவட்ட நெசவாளர் கூட்டுறவு இணையங்கள் மற்றும் 6 கூட்டுறவு நூற்பாலைகள், 8 மாவட்ட பனைபொருள் கூட்டுறவு இணையங்கள், 10 சிறுதொழில் உற்பத்தியாளர்கள் சேவை கூட்டுறவு சங்கங்கள், ஒரு மகளிர் குடிசைத்தொழில் மத்திய கூட்டுறவு சங்கம் மற்றும் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் என மொத்தம் 197 சங்கங்களுக்கு தேர்தல் திட்டம் வழங்கப்படுகிறது.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இதற்கான தேர்தல் அறிவிப்பை வெளியிடுவார்கள். அதன்படி 197 சங்கங்களின் 2 ஆயிரத்து 448 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. அவற்றில் 682 இடங்கள் பெண்களுக்கும், 438 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 6-ந் தேதியும், 8-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், வேட்புமனுவை திரும்ப பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு 9-ந் தேதியும் நடைபெற உள்ளது. போட்டி இருந்தால் 11-ந் தேதி வாக்குப்பதிவும், 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் நடைபெற உள்ளன.

நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ந் தேதி சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் நடைபெறும். 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள சங்கங்களின் பெயர் விவரங்களை www.co-o-p-e-l-e-ct-i-on.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story