கைதிகள் உல்லாச வாழ்க்கை எதிரொலி: வெவ்வேறு சிறைகளுக்கு 5 பேர் அதிரடி மாற்றம்


கைதிகள் உல்லாச வாழ்க்கை எதிரொலி: வெவ்வேறு சிறைகளுக்கு 5 பேர் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 15 Sep 2018 9:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:47 PM GMT)

சென்னை புழல் சிறையில் கைதிகள் உல்லாச வாழ்க்கை பற்றிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து 5 பேர் வெவ்வேறு சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.

செங்குன்றம், 

சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 பேரை வெவ்வேறு சிறைகளில் அடைக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா நேற்று உத்தரவிட்டார். அதன்படி முகமது ரபீக் கோவை சிறைக்கும், முகமது இப்ராகிம் சேலம் சிறைக்கும், முகமது ரியாஸ் பாளையங்கோட்டை சிறைக்கும், முகமது ஜாகீர் வேலூர் சிறைக்கும், ரபீக் திருச்சி சிறைக்கும் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 5 கைதிகளும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story