பார்வையற்ற சிறுவன் கழுத்தை இறுக்கி கொலை நாடகமாடிய தாய் கைது


பார்வையற்ற சிறுவன் கழுத்தை இறுக்கி கொலை நாடகமாடிய தாய் கைது
x
தினத்தந்தி 15 Sep 2018 10:15 PM GMT (Updated: 15 Sep 2018 7:59 PM GMT)

பரங்கிமலையில் 13 வயது பார்வையற்ற சிறுவனை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த பரங்கிமலை நரசத்புரம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37). இவரது மனைவி பத்மா (35). இவர்களுக்கு பரத் (13) என்ற பார்வையற்ற மகன் உள்ளார். அடையாறில் உள்ள பார்வையற்ற பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பரத், பத்மாவுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு படுத்திருந்த பரத் எழுந்திருக்கவில்லை எனக்கூறி பரங்கிமலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவனை, பத்மா அழைத்து சென்றார். அங்கு பரத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரத்தின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பத்மாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது பத்மா போலீசாரிடம் கூறியதாவது:-

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் தனியாக வசித்து வந்தேன். தனியாக வாழ்ந்து வந்தது மன உளைச்சலாக இருந்தது. இதனால் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். இதற்காக பிளாஸ்டிக் கவரை போட்டு பரத்தின் கழுத்தை இறுக்கினேன். இதில் அவன் மயங்கினான். பின்னர் நானும் அதை போல் செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை.

இதனால் பரத்தை காப்பாற்றுவதற்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றேன். ஆனால் அவன் இறந்துவிட்டான். அங்கு கணவர் மற்றும் குடும்பத்தினர் இருந்ததால் உண்மையை கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story