7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி


7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 16 Sep 2018 5:52 AM GMT (Updated: 16 Sep 2018 5:52 AM GMT)

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று நம்புகிறோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை, 

ராமசாமி படையாட்சியாரின் 101-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் முதல்வருடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சண்முகம், காமராஜ், அன்பழகன் உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர். 

இதன் பின்னர் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் ஏழு பேரின் விடுதலை குறித்து அமைச்சர்கள் கூறுகையில்,  பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி ஆளுநர் நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடவில்லை எனக் கூறினர்.

சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் புகார் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம் எனக் கூறினார். 

மேலும் தமிழக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததை குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,நீதிமன்றம், காவல்துறையை விமர்சித்த விவகாரத்தில் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவல்லுநர்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Next Story