சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. தொண்டர் கைது


சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசிய பா.ஜ.க. தொண்டர் கைது
x
தினத்தந்தி 17 Sep 2018 11:46 PM GMT (Updated: 17 Sep 2018 11:46 PM GMT)

சென்னையில் பெரியார் பிறந்தநாள் விழாவின்போது, அவரது உருவ சிலையை நோக்கி காலணி வீசிய பா.ஜ.க. தொண்டர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர் கள் நேற்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பெரியார் சிலை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பெரியார் சிலையை ஒரு நிமிடம் வெறித்து பார்த்தார்.

பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது காலில் இருந்த காலணியை கழற்றி, பெரியார் சிலை நோக்கி அந்த நபர் வீசினார். பிறகு பெரியாரை விமர்சித்து சில கோஷங்களை எழுப்பினார்.

பெரியார் சிலை நோக்கி காலணி வீசப்பட்ட சம்பவம், அங்கு மரியாதை செலுத்த வந்த அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் தப்பிச்செல்ல முயன்ற அந்த வாலிபரை அனைவரும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை சரமாரியாக தாக்க தொடங்கினர். செருப்பு, குச்சிகள் கொண்டு கடுமையாக தாக்கினர்.

இதையடுத்து அங்கு இருந்த போலீசார் ஓடிச்சென்று தர்ம அடி வாங்கிக்கொண்டு இருந்த அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு வாகனத்தில் ஏற்றினர். ஆனால் அங்கிருந்தவர்கள் போலீஸ் வாகனத்தை நகர விடாமல் தடுத்ததோடு, உள்ளே இருந்த வாலிபரை மேலும் தாக்க தொடங்கினர்.

சில நிமிட போராட்டத்துக்கு பின்னர் அந்த வாலிபர் வாகனத்தில் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக கண்டன கோஷமிட்டபடியே இருந்தனர்.

இந்த நிலையில் பெரியார் சிலைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த திருமாவளவன் காலணி வீச்சு சம்பவத்தை கேட்டு, தனது ஆதரவாளர்களுடன் அண்ணாசாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

இதையடுத்து தென்சென்னை கூடுதல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், துணை கமிஷனர் செல்வநாகரத்தினம், இணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது.

பெரியார் சிலை மீது காலணி வீசிய வாலிபர் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த வக்கீல் ஜெகதீசன் (வயது 30) என்பதும், பா.ஜ.க. உறுப்பினர் என்றும், அவர் எதற்காக பெரியார் சிலை நோக்கி காலணி வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காலணி வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பெரியார் சிலையை சுற்றிலும் நேற்று மாலை வரை 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர் சம்பவங்களால் அண்ணாசாலை நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

Next Story