ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 20 Sep 2018 12:07 AM GMT (Updated: 20 Sep 2018 12:07 AM GMT)

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கூர், சர்க்கரை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். சர்க்கரை கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும் அவர் செயல்படுவார்.

நில நிர்வாக இணை கமிஷனர் ஜெ.விஜயராணி, வேளாண்மை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டார்.

தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் கே.கற்பகம், நில நிர்வாக இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் பிங்கி ஜோவெல், ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு கூடுதல் கமிஷனர் எம்.பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக (டெல்டா மாவட்ட பாசனம்) நியமிக்கப்பட்டார்.

நில நிர்வாக இணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி, வணிக வரிகள், அதிக வரி செலுத்துவோர் பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டி.ஜெகனாதன், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் (வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம்) இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சமூக பாதுகாப்புத் திட்டங்கள் (வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகம்) கமிஷனர் அதுல் ஆனந்த், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கமிஷனராக மாற்றப்பட்டார்.

வேளாண்மை கூடுதல் இயக்குனர் குமாரவேல் பாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டார்.

பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனர் என்.வெங்கடாசலம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் (சி.எம்.டி.ஏ.) தலைமை செயல் அலுவலர் எம்.மதிவாணன், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story