கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி


கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 23 Sep 2018 7:07 AM GMT (Updated: 23 Sep 2018 7:07 AM GMT)

கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? என தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Karunas

சென்னை,

முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசிய வழக்கில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரிடம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் 3 மணி நேர விசாரணை நடத்தினர். பின்னர் எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் கருணாஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து எம்எல்ஏ கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி பிரிவை (307) ரத்து செய்தார். மேலும் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த நிர்வாகி செல்வநாயகம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே எம்எல்ஏ கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எம்எல்ஏ கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கருணாஸ் கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கருணாசுக்கு ஒரு சட்டம், ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா? கருணாஸ் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பிறகும் அவரை வேண்டுமென்ற கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம், "ஆளுக்கொரு நீதி - வேளைக்கொரு நியாயம்" என்ற நிலையில்தான் அமல்படுத்தப்படுகிறது. கைது செய்ய வேண்டியவர்களின் பின்னணி பற்றி கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும். விடுக்க வேண்டியவர்களை உடனேயே விடுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Next Story