கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம்


கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 23 Sep 2018 9:37 AM GMT (Updated: 23 Sep 2018 9:37 AM GMT)

கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

சென்னை,

திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாஸ் பேசும் போது, சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க அதே மாதிரி நடந்துக்குறாங்க. அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும். வரலாறு எனக்கும் தெரியும். சட்டமன்றத்திலேயே பேசினவன் தான் நான். உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினா தான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்து விடுவோம் என பேசியுள்ளார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  கருணாஸ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றனர்.

இதில் 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆணையர்கள் மற்றும் 100க்கும் மேற்பட போலீசார் கருணாஸ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர்.  இதையடுத்து போலீசார் கருணாஸை கைது செய்தனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், என் மீதான வழக்கை நான் நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்க இருக்கிறேன். பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக 307-வது பிரிவின் கீழ் (கொலை முயற்சி) கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? என்னை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றார்களா என தெரியவில்லை என கூறினார். 

இதையடுத்து சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து கைதான எம்.எல்.ஏ. கருணாஸ் எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் கைதாகிய செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய கட்சி நிர்வாகிகளும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ. கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி பிரிவை (307) ரத்து செய்தார். மேலும் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நிர்வாகி செல்வநாயகம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே எம்.எல்.ஏ. கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார்.  அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Next Story