மனைவியையும்- மகளையும் சாமியாரைவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கணவர்- தம்பி மீது புகார்


மனைவியையும்- மகளையும் சாமியாரைவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த கணவர்- தம்பி மீது புகார்
x
தினத்தந்தி 25 Sep 2018 12:09 PM GMT (Updated: 25 Sep 2018 3:33 PM GMT)

மனைவியையும் மகளையும் சாமியாரைவிட்டு கணவர் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

தர்மபுரி மாவட்டம் தேவராஜ்பாளையத்தை சேர்ந்தவர் மணி( 60)  இவருக்கு கோவையை சேர்ந்த  பெண் ஒருவருடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மணியின் மனைவி கோவை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

''எனக்கு 2000ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் தேவராஜ்பாளையத்தை சேர்ந்த மணி என்பவருடன் திருமணம் நடந்தது. 60 வயதான அவர் தனது வயதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.

என் கணவர் பெயரில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் 11ம் வகுப்பும், கடைசி மகள் 3ம் வகுப்பும் படிக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என் கணவரும், அவரது தம்பி துரைசாமியும், குட்டி மணி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர்.

பரிகார பூஜை நடத்தவேண்டும், அப்போது தான் சொத்து நிலைக்கும் என அந்த மந்திரவாதி கூறினார். எங்களது தோட்டத்திற்கு அருகேயுள்ள ஒரு ஓடையில் இரவு 7 மணிக்கு என்னை மட்டும் தனியாக பூஜைக்கு அழைத்து சென்றார். விடிய விடிய சாமியார் குட்டி மணி பூஜை நடத்தினார். என் தலையில், வயிற்றில் ஏதோ மை போல் தடவினார்.

குட்டி சாத்தானை ஏவி விடுவதாக கூறிய அவர், என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விஷயத்தை நான் என் கணவரிடம் கூறிய போது, மானம் போய் விடும் எனக்கூறி புகார் செய்ய தடை விதித்தார்.

என்னை தொடர்ந்து என் மூத்த மகளையும் ஒவ்வொரு அமாவாசை நாளில் பூஜைக்கு அழைத்து சென்றனர். குட்டிமணி என் மகளை தனியாக அழைத்து சென்று பூஜை செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தை என் மகள் என்னிடம் மறைத்து விட்டார்.

இதுதொடர்பாக என் கணவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவர் என்னை கோவை ரத்தினபுரியில் உள்ள என் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டார். என் அண்ணன், தம்பி ஆகியோரும் என் பெற்றோருடன் வசித்து வந்தனர். என் சகோதரர்கள் என்னிடம் இருந்த 6 பவுன் தங்க நகை, 1 லட்ச ரூபாயை வாங்கினார்கள். இப்போது, என்னை ஏமாற்றி அவர்களும் விரட்டி விட்டனர்.

என் குழந்தைகளுடன் நான் ஆதரவின்றி தவிக்கிறேன். மந்திரவாதியை அழைத்து வந்து என் வாழ்கையை நாசம் செய்த என் கணவர் அவர் தம்பி, என் பணம் நகையை அபகரித்த சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பூஜை நடத்துவதாக கூறி தாய், மகளை மந்திரவாதி பலாத்காரம் செய்ய கணவன் மற்றும் கணவனின் தம்பி காரணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Next Story