திருமணமான 3 நாட்களிலேயே வீட்டில் கழிப்பறை இல்லாததால் காதல் மனைவி ஓட்டம்; என்ஜினீயர் தற்கொலை


திருமணமான 3 நாட்களிலேயே வீட்டில் கழிப்பறை இல்லாததால் காதல் மனைவி ஓட்டம்; என்ஜினீயர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Sep 2018 9:45 PM GMT (Updated: 27 Sep 2018 8:11 PM GMT)

திருமணமான 3 நாளிலேயே வீட்டில் கழிப்பறை இல்லாததால் காதல் மனைவி ஓட்டம் பிடித்தார். புதுமாப்பிள்ளையான என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.

சேலம்,

சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 26). என்ஜினீயரான இவர் சேலத்தில் ஒரு தனியார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே வணிக வளாகத்தில் பணியாற்றிவந்த தீபா(28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடந்த 23-ந்தேதி ஓமலூரில் உள்ள செல்லதுரையின் குலதெய்வ கோவிலில் அவர்களுக்கு திருமணம் நடந்தது. அன்று இரவு செல்லதுரை காதல் மனைவியுடன் தனது வீட்டில் தங்கினார். மறுநாள் காலை தீபா வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

திடீர் மாயம்

வேலை முடிந்து வீடு திரும்பியதும், வீட்டில் இருந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அவரிடம் திருமணத்தை பதிவு செய்துவிடலாம் என்றனர். அதற்காக பிறப்பு மற்றும் கல்விச்சான்றிதழ்களை தருமாறு கேட்டனர். அப்போது எனக்கு பெற்றோர் இல்லை, பெரியம்மா மகள் வீட்டில் இருந்துதான் நான் வேலைக்கு சென்றுவந்தேன். சொந்த ஊர் திருப்பூர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது கணவரிடமும் நாம் தான் திருமணம் செய்துவிட்டோமே? ஏன் பதிவு செய்ய வேண்டும் என்று தீபா கேட்டதாக தெரிகிறது. இந்த பிரச்சினை தீவிரம் அடைந்ததால் மறுநாள் சான்றிதழ்களை கொண்டுவருவதாக தீபா கூறினார். மறுநாள் வேலைக்கு சென்றுவிட்டு சான்றிதழ் எடுத்துவருவதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை, வேலைக்கும் செல்லவில்லை.

கழிப்பறை இல்லாததால்...

செல்லதுரை தீபாவை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘நான் உறவினர் வீட்டில் உள்ளேன். உங்கள் வீட்டுக்கு வரமுடியாது’ என்றார். கணவரின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைந்த தீபா வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

பெண்ணை பற்றி எந்த தகவலும் தெரியாமல் ஏன் திருமணம் செய்தாய்? என்று செல்லதுரையிடம் அவரது பெற்றோர் கேட்டனர். இதனால் விரக்தியில் இருந்த அவர் 25-ந் தேதி இரவு திடீரென காணாமல்போனார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

கிணற்றில் பிணம்

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலையில் அவரது பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். மனைவி பிரிந்துசென்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர். போலீசார் செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினால் தான் தற்கொலைக்கான உண்மையான காரணங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story