மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் இன்று தி.மு.க. ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2018 11:45 PM GMT (Updated: 2 Oct 2018 8:17 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திருவாரூரில் இன்று (புதன்கிழமை) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்தியில் பாசிச பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், கெயில், நியூட்ரினோ போன்ற தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முதல் முயற்சிலேயே காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கிட முயற்சிக்கும் இத்திட்டத்தை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில், மத்திய பெட்ரோலிய துறை மந்திரியும், பா.ஜ.க.வை சேர்ந்தவருமான, தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் 3 இடங்கள் உள்பட, நாடு முழுவதும், 55 இடங்களில், ஹைட்ரோ கார்பன் எடுக்க, வேதாந்தா நிறுவனம், ஓ.என்.ஜி.சி. எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்துக்கு அனுமதி வழங்கிட திட்டமிட்டு, தமிழகத்தில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் காவிரி டெல்டா பகுதியில், 2 இடங்களில் வேதாந்தா நிறுவனத்துக்கும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழாவில் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமானதும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமான காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, 3-10-2018 அன்று (இன்று) புதன்கிழமை காலை 10 மணிக்கு, திருவாரூர் பஸ் நிலையம் அருகில், தஞ்சை வடக்கு - தெற்கு, நாகை வடக்கு - தெற்கு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் சார்பில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தலைமையில், இம்மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை எழுச்சியோடு நடத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு நோட்டீஸ் கொடுக்க ஆலோசனை நடைபெற்றதாக பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு வெளிவரப்போகின்ற நேரத்தில் புதிய பதவி நீக்கத்தை வைத்து இந்த ஆட்சியின் பதவி காலத்தை ஓட்டி விடலாம் என்ற நப்பாசையில் அடுத்த தகுதி நீக்கத்திற்கு திட்டம் தீட்டுகிறது அ.தி.மு.க அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க அத்தனை நாடகத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திக்கொண்டிருப்பதும், அவசர கதியில் இப்படியொரு நோட்டீசை கொடுக்க முனைவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அதற்கு சபாநாயகரையும் பயன்படுத்துவது, “சபாநாயகர் எந்தச் சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவராக, ‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல திகழ வேண்டும்’ என்று காலம் காலமாக இருந்துவரும் பாரம்பரிய மரபையும், வைர அளவுகோலையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்த்தி கேலிக்கூத்தாக்கி, தான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அரசியல் சட்டத்தையே வெறும் காட்சி பொருளாக்குவது பேராபத்தாகும்.

ஆனால், ஊழலின் பெருவெள்ளமாகத் திகழும் அ.தி.மு.க. அரசை அனுமதிப்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காத அல்லது பா.ஜ.க.வுக்கு செல்வாக்கு இல்லாத தமிழகத்தில் உள்ள மக்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருக்கும் ஜனாதிபதி நிச்சயம் கருதமாட்டார் என்று நம்புகிறேன்.

ஆகவே, முற்றிலும் சீரழிந்து விட்ட தமிழக அரசு நிர்வாகத்தை அரசியல் சட்டவிரோத அ.தி.மு.க. அரசிடம் இருந்து மீட்டெடுத்து, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் இழந்துவிட்ட செழிப்பினை மீண்டும் பெறவும் ஜனாதிபதி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story