குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் மனு சி.பி.ஐ.க்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்


குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் மனு சி.பி.ஐ.க்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 9 Oct 2018 9:45 PM GMT (Updated: 9 Oct 2018 9:07 PM GMT)

குட்கா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இன்ஸ்பெக்டர் சம்பத் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சி.பி.ஐ.க்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது. இதற்காக தமிழக அமைச்சர்கள், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருக்கு பெரும் தொகை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ் உள்பட பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கில், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக வேலை செய்த சம்பத் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த நிலையில், இவர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் இன்ஸ்பெக்டர் சம்பத் கூறியிருப்பதாவது:-

செங்குன்றம் போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந்தேதி முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி வரை வேலை செய்தேன். மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனராக இருந்த ஜெயக்குமார், கடந்த 2015-ம் ஆண்டு செங்குன்றத்தில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார். பின்னர், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் அதை ஒப்படைத்தார்.

உதவி கமிஷனராக வேலை செய்த மன்னர்மன்னனிடம் அது ஒப்படைக்கப்பட்டது. எனக்கு அந்த திடீர் சோதனை குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்தும் எதுவும் தெரியாது.

பின்னர் இந்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவை மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா புகையிலை பொருட்கள் என்று கூறி, அவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழித்து விட்டனர். இவற்றை அழிக்கும்போது அவர்களுடன் நானும் பாதுகாப்புக்காக சென்றேன்.

இதன்பின்னர், 2016-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி முதல், தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக வேலை செய்தேன். பின்னர், தூத்துக் குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டேன்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை மற்றும் ஆறுமுகநேரியில் உள்ள என்னுடைய வீடுகளிலும், என் உறவினர் வீட்டிலும் திடீரென சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஒரே காரணத்துக்காக, என்னை இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். தற்போது அவர்கள் என்னை கைது செய்யலாம் என்று அஞ்சுகிறேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி சி.பி.ஐ. போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story