மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்த தபால் ஊழியர்களுக்கு ‘அஞ்சல் சேவை’ விருதுகள் கவர்னர் வழங்கினார்


மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்த தபால் ஊழியர்களுக்கு ‘அஞ்சல் சேவை’ விருதுகள் கவர்னர் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Oct 2018 9:45 PM GMT (Updated: 10 Oct 2018 9:45 PM GMT)

தபால் துறையில் மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்த 8 ஊழியர்களுக்கு ‘அஞ்சல் சேவை’ விருதுகளை கவர்னர் வழங்கினார்.

சென்னை,

தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி தமிழ்நாடு வட்ட தபால் துறை சார்பில் ‘அஞ்சல் சேவை’ விருது வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் மு.சம்பத் தலைமை தாங்கினார். இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்த தபால் ஊழியர்கள் 8 பேருக்கு ‘அஞ்சல் சேவை’ விருதுகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி பேசினார்.

இதில் புதுச்சேரி இடப்பட்டு கிளை அஞ்சலக கிராமிய தபால் சேவகர் ஏ.எஸ்.சிராஜுதீன், விருதுநகர் துணை கோட்ட மெயில் ஓவர்சீர் ஆர்.பழனிவேல், கோவை கோட்ட விற்பனை செயல் அதிகாரி பி.என்.சிவகுமார், சென்னை தெற்கு கோட்ட துணை அஞ்சலக அதிகாரி ஆர்.பிரபா, சென்னை பிரிப்பக கோட்ட துணை கண்காணிப்பாளர் கே.சிவசங்கர், தாம்பரம் கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சென்னை நகர மண்டல துணை கண்காணிப்பாளர் ஆர்.பானுமதி, சேலம் ஆத்தூர் துணை கோட்ட அஞ்சல் ஆய்வாளர் ஏ.மஞ்சு ஆகியோருக்கு ‘அஞ்சல் சேவை’ விருதுகள் வழங்கப்பட்டது.

அஞ்சல் உறை வெளியீடு

மேலும் தேசிய அஞ்சல் வாரத்தை குறிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல் உறையையும் கவர்னர் வெளியிட்டார்.

விழாவில் மத்திய மண்டல (திருச்சி) தபால் துறை தலைவர் அம்பேஷ் உப்மன்யு வரவேற்றார். சென்னை மண்டல தபால் துறை தலைவர் (வணிக மேம்பாடு) வெங்கடேஷ்வர்லு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், சென்னை மண்டல தபால் துறை தலைவர் ஆர்.ஆனந்த் நன்றி கூறினார்.

தேசிய அளவில் சிறப்பாக பணிபுரிந்த சென்னை அசோக்நகர் துணை அஞ்சலக தபால்காரர் கே.கணபதி, தமிழ்நாடு வட்ட முதன்மை தபால்துறை தலைமை அலுவலக துணை கண்காணிப்பாளராக (வர்த்தக மேம்பாடு) பணிபுரிந்த ஸ்ரீவித்யா ஆகியோருக்கு வருகிற 15-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ‘மேக்தூத் விருது’ வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story