சென்னையில் அதிர்ச்சி சம்பவம் மகளை தகாத உறவுக்கு அழைத்த தாய் கைது தந்தை புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை


சென்னையில் அதிர்ச்சி சம்பவம் மகளை தகாத உறவுக்கு அழைத்த தாய் கைது தந்தை புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 9:50 PM GMT)

தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் குமார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது- வயது 45). தொழில் அதிபரான இவர், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் பழம்பெரும் சினிமா பட இயக்குனர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவன். எனது உறவினர் ஒருவர் போலீஸ்துறையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாரம்பரியமிக்க எனது குடும்பத்தில் திடுக்கிடும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய எனது மகள் திடுக்கிடும் தகவல் ஒன்றை என்னிடம் கூறினாள். அதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதை விசாரித்தபோது உண்மை என்று தெரியவந்தது.

தகாத உறவுக்கு அழைப்பு

எனது 14 வயது மகளிடம், எனது மனைவியே தகாத உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். உறவுக்கு மறுத்த எனது மகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். கொல்வதற்கும் துணிந்துவிட்டார். இதற்கு எனது மாமியாரும் உடந்தையாக செயல்பட்டது வருந்தத்தக்க விஷயம்.

நான் எச்சரிக்கை விடுத்தும் எனது மனைவியும், மாமியாரும் திருந்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து எனது மகளுக்கு தொல்லை கொடுத்த வண்ணம் உள்ளனர். எனது மகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் அவர்கள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைது

இந்த புகார் மனு மீது தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

போலீசில் புகார் கொடுத்தது தெரிந்ததும் புகார் கூறப்பட்ட பெண்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

அவர்கள் கும்பகோணத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் கும்பகோணத்திற்கு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Next Story