தமிழகத்தில் 471 புதிய பஸ்கள் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்


தமிழகத்தில் 471 புதிய பஸ்கள் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Oct 2018 11:15 PM GMT (Updated: 10 Oct 2018 10:28 PM GMT)

தமிழகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 471 புதிய பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை, 

பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு 8 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 744 பஸ்களை, நாள்தோறும் 87.22 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி வருகிறது.

சுமார் 1 கோடியே 80 லட்சம் பயணிகள், தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பஸ் சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் போக்குவரத்துத் துறையின் வரலாற்றில் முதன் முறையாக சென்னை போன்ற பெருநகரங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்கும் வகையில், இங்கிலாந்து நாட்டின் சர்வதேச அமைப்பான சி-40 என்கிற முகமையின் ஒத்துழைப்புடன் சென்னையில் 80 மின்சார பஸ்களும், கோவையில் 20 மின்சார பஸ்களும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மத்தியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை) 60 பஸ்களும், விழுப்புரத்திற்கு 103, சேலத்திற்கு 77, கோவைக்கு 43, கும்பகோணத்துக்கு 111, மதுரைக்கு 30, நெல்லைக்கு 46, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 1 பஸ், என ரூ.126 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் 471 புதிய பஸ்கள் விடப்பட்டு உள்ளன. இந்த புதிய பஸ் போக்குவரத்து சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இப்புதிய பஸ்களில், சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கான 60 பஸ்களில், 38 சொகுசு பஸ்கள், 8 கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பஸ்கள், 10 குளிர்சாதன வசதி படுக்கையுடன் கூடிய நவீன சொகுசு பஸ்கள், 4 இருக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட நவீன சொகுசு பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வி.பாஸ்கரன், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story