மக்களின் சுமைகளை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமம் டாக்டர் ராமதாஸ் கண்டனம்


மக்களின் சுமைகளை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமம் டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 11 Oct 2018 7:30 PM GMT (Updated: 11 Oct 2018 7:00 PM GMT)

மக்களின் சுமையை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதிக வரி

வீட்டு வரி என்பது கட்டமைப்பு வசதிகள் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆனால், சென்னையில் அற்புதமான கட்டமைப்பு வசதிகள் கொண்ட பகுதிகளில் வசூலிக்கப்படுவதை விட, அடிப்படை வசதிகளே இல்லாத திருவொற்றியூர் மண்டலத்தில் அதிக வரி வசூலிக்கப்படுகிறது.

சென்னையின் மற்ற பகுதிகளில் இருப்பதைவிட திருவொற்றியூரில் நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதை செலுத்த முடியாமல் மக்கள் தடுமாறி வருகின்றனர். இத்தகைய சூழலில், வீடுகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அந்த வீடுகளை மறு மதிப்பீடு செய்து கூடுதல் வரி விதிக்கும் அதிகாரிகள், அந்த கூடுதல் வரியை 5 ஆண்டுகள் முன்தேதியிட்டு செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், ஆண்டு வரியாக ரூ.2,000 செலுத்த வேண்டிய வீட்டுக்கு ரூ.41,500 வரி செலுத்த வேண்டியுள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படும் வரியை விட இது 20 மடங்குக்கும் அதிகம். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கொள்ளைக்கு சமம்

அளவுக்கு அதிகமான வீட்டு வரியைக் கண்டித்தும், அதை குறைக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. ஆனாலும் சென்னை மாநகராட்சி உயர்த்தப்பட்ட வரியைத் தான் வசூலித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய அதிக வரி விதிப்பால் மாநகராட்சிக்கு எந்த வகையிலும் கூடுதல் வருவாய் கிடைக்கவில்லை. மாறாக, தவறான நோக்கம் கொண்ட அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோர் தான் பயனடைகின்றனர்.

இவை ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் வீட்டு வரி உயர்த்தப்பட்டு, புதிய வரி மதிப்பிடப்பட்டு வருகிறது. அதன்படி, இப்போது இருப்பதை விட இன்னும் ஒரு மடங்கு கூடுதலாக வரி செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே மக்கள் வரிச்சுமையையும், விலைவாசியையும் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக உயர்த்தப்படும் வரி மக்களின் சுமைகளை அதிகரிக்கும். மக்களின் சுமைகளை உணராமல் வீட்டு வரியை உயர்த்துவது கொள்ளைக்கு சமமாகும்.

குறைக்க வேண்டும்

எனவே, மக்களின் சுமைகளை உணர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் வீட்டு வரியை சென்னையின் மற்ற பகுதிகளில் வசூலிக்கப்படுவதற்கு இணையாக குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, வீட்டு வரியை குறைத்து நிர்ணயிப்பதற்காக லஞ்சம் வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story