ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய போர் விமானத்திற்கு காவி வண்ணம் திருநாவுக்கரசர் கண்டனம்


ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய போர் விமானத்திற்கு காவி வண்ணம் திருநாவுக்கரசர் கண்டனம்
x
தினத்தந்தி 11 Oct 2018 9:15 PM GMT (Updated: 11 Oct 2018 8:41 PM GMT)

ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாடு மைய போர் வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு காவி வண்ணம் பூசப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு ஸ்ரீபெரும்புதூரில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அருகாமையில் அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் 1993-ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக் கழகமாக தொடங்கப்பட்டது. பிறகு 2012-ல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உயர்நிலை தேசிய கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது. அங்கே இந்தியாவின் 29 மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதுநிலை படிப்பை அங்கே தங்கி படித்து வந்தனர்.

அந்த நிறுவனத்தில் பயிலுகிற பல்வேறு மாணவர்கள் அங்கு நிலவுகிற வசதி குறைவு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கேள்வியுற்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரூபி ஆர். மனோகரனை அங்கே அனுப்பி நேரில் சென்று ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டேன். அவர் பார்வையிட்டு கொடுத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன.

எந்தெந்த வகையில் ராஜீவ்காந்தியின் பெயரையும், புகைப்படத்தையும் மறைக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது. இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அனைத்து படிவங்களிலும் ராஜீவ்காந்தியின் படத்துடன் இடம் பெற்றிருந்த லோகோ சமீபகாலத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. அங்கே உள்ள வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு இன்றைக்கு காவி வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.

அதேபோல, கருத்தரங்கு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படம் அகற்றப்பட்டிருக்கிறது. வளாகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த அவரது படம் அகற்றப்பட்டு ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தியின் பிறந்தநாளோ, நினைவுநாளோ மற்றுமுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோ அங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை.

மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்நிறுவனத்திற்கு முதல்வரோ, பேராசிரியர்களோ, இயக்குனர்களோ பல மாதங்களாக நியமிக்கப்படாமல் உள்ளது. இத்தகைய போக்கு தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்த அமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடும்.

ராஜீவ்காந்தியின் புகழை போற்றுகிற வகையில் நிறுவப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளை களைகிற வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story