உளுந்தூர்பேட்டை அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஊழியர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஊழியர் கைது
x
தினத்தந்தி 12 Oct 2018 9:07 PM GMT (Updated: 12 Oct 2018 9:07 PM GMT)

விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 28), விவசாயி. இவருக்கு சேந்தமங்கலம் ஊராட்சி எல்லையில் சொந்தமாக விளை நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வரப்பு சீர்செய்தல் பணிக்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

இதை அறிந்த குமார் அந்த தொகையை கேட்பதற்காக திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த பணி மேற்பார்வையாளர் வேலுவை சந்தித்து, வரப்பு சீர்செய்தல் பணிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட பணம் குறித்து கேட்டார்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

அதற்கு பணி மேற்பார்வையாளர் வேலு, வரப்பு சீர்செய்தல் பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை தரவேண்டுமானால் தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறினார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

கைது

லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய ஆலோசனையின்படி திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்ற குமார் அங்கிருந்த வேலுவிடம் வரப்பு சீர்செய்தல் பணிக்காக தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்தை தருமாறு கூறி ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார்.

அப்போது அந்த பணத்தை வேலு வாங்கிய போது, அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விரைந்து வந்து வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து வேலுவை கைது செய்தனர்.

Next Story