நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு கைது


நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு  கைது
x
தினத்தந்தி 13 Oct 2018 2:30 PM GMT (Updated: 13 Oct 2018 2:30 PM GMT)

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான ரவுடி பினு கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வலம்வந்த பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பினுவின் பிறந்தநாளை கொண்டாட அவரது தம்பி மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்

இந்த கொண்டாட்டத்தில் நகரத்தின் முக்கிய ரவுடிகள் பலர் பங்கேற்றனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அதிரடியாக அப்பகுதிக்கு சென்று ரவுடிகளை கைது செய்தனர். ஆனால் அங்கிருந்து பினு உள்ளிட்ட சிலர் மட்டும் தப்பிச் சென்றார். பின்னர் அவர் தாமாக வந்து சரணடைந்தார்.

இதையடுத்து, கடந்த ஜூன் 23-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் ரவுடி பினுவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, தினமும் மாங்காடு காவல்நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், நிபந்தனை ஜாமீனை மீறி மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் ரவுடி பினு தலைமறைவானார். 

இந்த நிலையில், ஏறக்குறைய 4 மாதங்கள் கழித்து, ரவுடி பினுவை காவல் துறை கைது செய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியில் பினு கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

Next Story