கவர்னர் மாளிகை ஊழியர்கள் முறைகேடு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு


கவர்னர் மாளிகை ஊழியர்கள் முறைகேடு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2018 10:45 PM GMT (Updated: 13 Oct 2018 8:12 PM GMT)

சமூக பொறுப்புணர்வு நிதி பெறுவதில் புதுச்சேரி கவர்னர் மாளிகை ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளதாக நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் இருந்து புதுச்சேரி வளர்ச்சிக்காக சமூக பொறுப்புணர்வு நிதி பெறுவதற்கு அரசின் சார்பில் சி.எஸ்.ஆர். குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக முதல்-அமைச்சர் உள்ளார்.

சி.எஸ்.ஆர். நிதி சம்பந்தமாக தலைவர் மற்றும் அதற்கான விதிமுறைகள் இருக்கும்போது கவர்னர் அலுவலகத்தில் இருந்து பல நிறுவனங்கள், ரோட்டரி கிளப்புகளை நேரடியாக தொடர்பு கொண்டு சி.எஸ்.ஆர். நிதி கேட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி இதுவரை ரூ.85 லட்சம் வசூல் செய்திருக்கிறார்கள். அந்த நிதி யார், யாரிடமிருந்து வசூல் செய்யப்பட்டது என்ற விவரம் இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை.

அந்த நிதியை சி.எஸ்.ஆர். கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமே தவிர கவர்னர் மாளிகை அலுவலகத்திற்கு செலவு செய்ய அதிகாரம் கிடையாது. இதில் முறைகேடு நடந்துள்ளது. இது அதிகார துஷ்பிரயோகம்.

கவர்னர் அலுவலகமே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது. கவர்னர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக சி.எஸ்.ஆர். என்ற பெயரில் பணத்தை வசூல் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு கவர்னர் பொறுப்பு ஏற்க வேண்டும். பலர் என்னிடம் நேரடியாக வந்து கவர்னர் மாளிகை மூலம் சி.எஸ்.ஆர். நிதி கேட்டு தொந்தரவு கொடுப்பதாக புகார் அளிக்கின்றனர்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

கிரண்பெடி மறுப்பு

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் உள்ள வாய்க்கால்கள் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. தற்போது பருவமழை பெய்ய தொடங்க உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்கு வசதியாக தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூலமாக வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தொண்டு செய்ய விரும்புவோர் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். இந்த பணிக்காக நாங்கள் பணம் எதுவும் பெறவில்லை. கவர்னர் மாளிகை மூலம் ஒரு காசோலை கூட பெறப்படவில்லை.

தூர்வாரப்படுவதற்கான நிதி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்பட்டு வருகிறது. சமூக பொறுப்புணர்வு நிதி இதில் வராது. தூர்வார் வாரும் பணிக்காக எனது வேண்டுகோளை ஏற்று பலர் நேரடியாக இந்த பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். வரும் காலங்களிலும் பலரின் நிதி உதவியுடன் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு கிரண்பெடி கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு கவர்னர் கிரண்பெடி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்காக எவ்வளவு நிதி தரப்பட்டுள்ளது?

பதில்:- அதுபற்றி தெரியவில்லை. விரைவில் சேகரித்து தருகிறேன்.

கேள்வி:- இந்த விவகாரத்தில் கவர்னர் மாளிகையில் ரூ.85 லட்சம் வரை முறைகேடு நடைபெற்று இருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளாரே?

பதில்:- குற்றச்சாட்டு குற்றச்சாட்டாகவே இருக்கும்.

இவ்வாறு கிரண்பெடி கூறினார்.

Next Story