காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 9:07 PM GMT)

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை, 

சதுரங்க விளையாட்டில் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மாணவர் பிரக்ஞானந்தா மற்றும் மாணவி வைஷாலிக்கு மத்திய அரசின் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை துறைமுகம் விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.27 லட்சமும், சிறுமி வைஷாலிக்கு ரூ.9 லட்சமும் காசோலையாக வழங்கினார். அதைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

50 ஆண்டுகாலம் தமிழகம் பின்னோக்கி சென்றதற்கு கழகங்களின் தவறான அணுகுமுறை, ஆட்சி முறை தான் காரணம். தமிழகம் வளரவேண்டிய உச்சத்தை எட்ட முடியாமல் நிற்கிறது.

50 ஆண்டுகாலம் ஆட்சி செய்து முடித்து இருக்கிறார்கள். தி.மு.க. மீது எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது? எதனால் வந்தது?. அ.தி.மு.க. மீது என்ன ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது? என்ன காரணத்துக்காக வந்தது? என கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அது நடக்கட்டும். ஊழல் செய்ததில் யார் பெரியவர்கள் என்று பார்க்கிறார்கள்?

அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சி தரக்கூடிய அரசாங்கம் வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு பா.ஜ.க.வை விரும்புகிறார்கள். மோடி உலகம் போற்றக்கூடிய வகையில் ஆட்சி வழங்கி வருகிறார். தமிழகத்தில் ஊழலற்ற, வளர்ச்சி தரக்கூடிய ஒரே கட்சி என்றால், அது பா.ஜ.க. தான்.

பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று சொல்பவர்களின் கால் எங்கே இருக்கிறது என்று பார்க்க வேண்டும். தேர்தல் வரப்போகிறது. கழகங்களிடம் ஒன்றுமே இல்லை. ஏதாவது சொல்லி ஆகவேண்டும் என்று குற்றச்சாட்டு வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பா.ஜ.க. விளக்கம் கொடுக்க முடியாது.

காங்கிரஸ் காட்டிக்கொடுத்த காரணத்தால் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அன்று குற்றச்சாட்டு வைத்தவர்கள் இன்று பேசாமல் இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?. ராஜபக்சேவை காங்கிரஸ்-தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று சந்தித்து வந்ததற்கான காரணத்தை தெளிவு படுத்தவில்லை. இதைவிட அநியாயம் கிடையாது.

தமிழ் சமுதாயத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்கு மோடியை விட்டால் வேறு கதியே கிடையாது. இலங்கையில் உள்ள தமிழ்மக்கள் காப்பாற்றப்பட மோடி உதவி செய்து வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இலங்கையில் ஒரு தமிழன் இருக்கமாட்டான். இலங்கை தமிழன் மட்டுமல்லாது நம்முடைய தமிழர்களும் அழிக்கப்படுவார்கள்.

ஈழத்தமிழர் படுகொலையில் பிரதான குற்றவாளி காங்கிரஸ். இவ்வளவு பெரிய அயோக்கியத்தனத்துக்கு தமிழர்கள் எப்படி ஆதரவு கொடுக்க முடியும். ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரின் விடுதலையில் மத்திய அரசின் அழுத்தம் எதுவும் இல்லை. கவர்னர் முடிவு எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story