எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிப்பது தமிழகத்தின் நலனுக்கும், முன்னேற்றத்துக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு மு.க.ஸ்டாலின் அறிக்கை


எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிப்பது தமிழகத்தின் நலனுக்கும், முன்னேற்றத்துக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2018 11:30 PM GMT (Updated: 13 Oct 2018 10:01 PM GMT)

எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்தின் நலனுக்கும், முன்னேற்றத்துக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதுள்ள 3,120 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே அ.தி.மு.க தலைமை கழகத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பொன்னையன் பத்திரிகையாளர்களை சந்தித்து “ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது” என்று அறிவித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

தன் மீதுள்ள ஊழல் புகாருக்கு பதில் சொல்லக்கூட அஞ்சி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க அமைப்பாளர் மூலம் பதில் சொல்லி இருப்பது தி.மு.க.வின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதல்- அமைச்சரிடம் பதில் இல்லை என்பதையும், அந்த ஊழல் புகார்கள் உண்மை என்பதையும் உறுதிபடுத்தி உள்ளது.

சி.பி.ஐ. விசாரணை

“லஞ்ச ஊழல் தடுப்புத்துறை தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பு. விஜிலென்ஸ் கமிஷனரும் தன்னாட்சி அதிகாரம் பெற்றவர்” என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பில் எடுத்து வைத்த வாதங்களை நேற்றைய தீர்ப்பில் ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது. “நெடுஞ்சாலை துறையில் உள்ள எம்பவர்ட் கமிட்டியின் தலைவர் முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் இயக்குனர் மற்றும் விஜிலென்ஸ் ஆணையரை நியமிப்பவர் முதல்- அமைச்சர். ஆகவே முதல்-அமைச்சருக்கு எதிரான ஊழல் புகாரினை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரிப்பது நேர்மையாக இருக்காது” என்று சுட்டிக்காட்டித்தான் சென்னை ஐகோர்ட்டு இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு அளித்துள்ளது.

அம்பலப்படுத்தி உள்ளது

லஞ்ச ஊழல் தடுப்புத்துறை, விஜிலென்ஸ் ஆணையம் போன்ற அமைப்புகளின் நேர்மைத்தன்மை, சுதந்திரம் எல்லாம் அ.தி.மு.க ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பினை உறுதிப்படுத்தும் வகையில் நேற்றையதினம் வெளிவந்துள்ள அ.தி.மு.க அமைப்பு செயலாளரின் பேட்டி லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல அ.தி.மு.க என்ற கட்சியின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இயங்கி கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது.

ஒரு வார காலத்திற்குள் ஊழல் தொடர்பான கோப்புக்களை சி.பி.ஐ.யிடம் கொடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடைபோடும் விதமாக இந்த பேட்டி அளிக்கப்பட்டு உள்ளது.

லஞ்சஊழல் மற்றும் தடுப்புத்துறையின் அப்பீல் பற்றி அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் எப்படி முடிவு செய்யமுடியும்? முதல்-அமைச்சர் மீது மட்டுமல்ல அ.தி.மு.க அமைச்சர்கள் மீதும் நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளிலும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் நடவடிக்கைகளை அ.தி.மு.க தலைமைக் கழகம்தான் இனி வரும் காலங்களில் கட்டுப்படுத்தி விருப்பம்போல் ஆட்டிவைக்கப்போகிறது.

ஈடுகட்ட முடியாத பேரிழப்பு

ஆதாரபூர்வமான ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி குறிப்பாக தனது துறையிலேயே கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் குற்றத்திற்கு உள்ளாகி உள்ள எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் பதவியில் நீடிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும் இழந்துவிட்டதால், உடனடியாக பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

பதவியில் நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழக நலனுக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தால், அவரை கவர்னரே ‘டிஸ்மிஸ்’ செய்யவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதுவே தமிழக மக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Next Story