ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:53 PM GMT (Updated: 16 Oct 2018 10:53 PM GMT)

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க அக்கறை இருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட பா.ம.க.வினர் 24 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாக பொய்யான வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது சட்டவிரோத செயல் மட்டுமின்றி, உரிமைக்குரலை அப்பட்டமாக ஒடுக்கும் முயற்சியும் ஆகும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டியது அங்கு வாழும் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அதைத் தான் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க.வினரும், பசுமைத்தாயகம் அமைப்பினரும் செய்தார்கள். அவர்களின் பணி பாராட்டப்பட வேண்டியதாகும்.

ஆனால், மத்திய அரசுக்கு கங்காணியாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த உரிமம் பெற்றுள்ள வேதாந்தா போன்ற நிறுவனங்களின் கூலிப்படையாகவும் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் விழிப்புணர்வு பிரசாரம் செய்தவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தி இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதைவிட மிகமோசமான நம்பிக்கைத் துரோகத்தை எவராலும் இழைக்க முடியாது.

“தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால், மறுபுறத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். அவர்களின் இரட்டை வேடம் வெகுவிரைவில் மக்களிடம் அம்பலமாகிவிடும்.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். பா.ம.க.வினர் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story