திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு


திருச்சியில் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி: துபாய் விமானத்தில் திடீர் கோளாறு
x
தினத்தந்தி 17 Oct 2018 8:00 PM GMT (Updated: 17 Oct 2018 7:51 PM GMT)

திருச்சியில் இருந்து புறப்பட்ட துபாய் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருச்சி, 

திருச்சியில் இருந்து புறப்பட்ட துபாய் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு 12-ந்தேதி அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 130 பயணிகள், 6 ஊழியர்களுடன் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு விமானம் மேலே கிளம்பிய போது ஆண்டெனா, விமானநிலைய சுற்றுச்சுவரில் மோதி விட்டு பறந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் 136 பேரும் உயிர்தப்பினர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் 14-ந்தேதி திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் ஏ.சி. இயங்காததால் அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை துபாய் விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 114 பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். விமானம் ஓடு பாதையில் சென்றபோது முகப்பு விளக்குகள் திடீரென எரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். இது பற்றி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார்.

விமானநிலையத்தில் இருந்து தொழில்நுட்ப ஊழியர்கள் விரைந்து வந்து முகப்பு விளக்கு களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த கோளாறை உடனடியாக சரிசெய்ய முடியாததால் விமானம் இயக்கப்படாது என அறிவித்து விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டனர். பின்னர் ஷார்ஜா சென்ற விமானத்தில் 30 பயணிகள் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள பயணிகள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

விமானத்தின் முகப்பு விளக்குகள் எரியாததை தொடக்க நிலையிலேயே விமானி கண்டுபிடித்து சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் நடந்து வரும் தொடர் சம்பவங்களால் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story