பெற்றோரின் மறைவினால் கல்வியை நிறுத்திய இளம் பெண், சகோதரரின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


பெற்றோரின் மறைவினால் கல்வியை நிறுத்திய இளம் பெண், சகோதரரின் கல்விச் செலவை அரசே ஏற்கும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 9:38 PM GMT (Updated: 23 Oct 2018 9:38 PM GMT)

பெற்றோரின் மறைவினால் வறுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்வியை நிறுத்திய இளம் பெண் மற்றும் அவரது சகோதரரின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், காளிதிம்பம் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகள் சிவரஞ்சனி. தனது தாய், தந்தையின் மறைவுக்குப்பிறகு, தன்னுடைய சகோதரர் ஹரிபிரசாந்த்தை தொடர்ந்து படிக்க வைப்பதற்காக, கோவை அரசு கலைக் கல்லூரியில் தான் படித்து வந்த பி.ஏ. படிப்பை நிறுத்திவிட்டு, 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதாகவும், தனக்கு அரசு வேலையோ அல்லது தொடர்ந்து படிப்பதற்கு உதவியோ தமிழ்நாடு அரசு செய்யவேண்டும் என்று ஊடகத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கல்விச் செலவு

சிவரஞ்சனியின் பேட்டியை தொலைக்காட்சியில் 21-ந் தேதியன்று காலை நான் பார்த்தேன். ஏழை-எளிய மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு, சிவரஞ்சனி தொடர்ந்து கோவை அரசு கலைக்கல்லூரியில் படிப்பதற்கும், அவருடைய சகோதரர் ஹரிபிரசாந்த் தாளவாடி உண்டு உறைவிடப்பள்ளியில் தொடர்ந்து படிப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கும். அவர்கள் இருவரும் தொடர்ந்து படிப்பதற்கு ஆகும் செலவை தமிழக அரசே ஏற்கும். இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story