தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீசார் அழைத்துச்சென்றதால் பரபரப்பு


தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீசார் அழைத்துச்சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Nov 2018 10:06 AM GMT (Updated: 6 Nov 2018 10:06 AM GMT)

தடையை மீறி பட்டாசு வெடித்த சிறுவர்களை போலீசார் அழைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, தீபாவளி திருநாளில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறுபவர்களை கண்காணிக்க என தமிழகத்தில் 500 -தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  அதனால் பொதுமக்கள் இந்த உத்தரவை கடைப்பிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.  சுப்ரீம் கோர்ட்  உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக நெல்லையில் 6 பேர், ஸ்ரீவில்லிபுத்தூர் 8 பேர், கோவையில் 30 பேர், விழுப்புரத்தில் 80 பேர், திருப்பூரில் 57 பேர் என இதுவரை 181 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறுவர்களை அழைத்துச்சென்ற போலீஸ்

சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி, ராசிபுரத்தில் பகல் 12 மணியளவில் பட்டாசு வெடித்த சித்தேஸ்வர பிரபு என்ற ஏ.சி. மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் பட்டாசு வெடித்த 20 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அனுமதி இல்லாத நேரத்தில் பட்டாசு வெடித்தாக கூறி அங்குள்ள பகுதிகளை சார்ந்த 10 வயதுக்குட்பட்ட 20 சிறுவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஏராளமான மக்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

இதைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடிக்க மாட்டோம் என சிறுவர்கள் மற்றும் பெற்றோரிடமும் எழுதி வாங்கி கொண்டு சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களுடன் போலீசார் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story