சென்னையில் தீபாவளி பட்டாசு ஒலி மாசு அதிகம் ; காற்றின் மாசு குறைவு


சென்னையில் தீபாவளி  பட்டாசு ஒலி மாசு அதிகம் ; காற்றின் மாசு குறைவு
x
தினத்தந்தி 7 Nov 2018 12:38 PM GMT (Updated: 7 Nov 2018 12:38 PM GMT)

சென்னையில் தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசின் காரணமாக ஏற்படும் ஒலி மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்தும், காற்றின் மாசு குறைந்தும் உள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த தீபாவளியில் காற்றுமாசு குறைந்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறி இருப்பதாவது:-

சென்னையில் தீபாவளி தினத்தன்று வெடிக்கப்படும் பட்டாசின் காரணமாக ஏற்படும் ஒலி மாசு கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரித்தும், காற்றின் மாசு குறைந்தும் உள்ளது.

கடந்தாண்டு 78 டெசிபெல்லாக இருந்த ஒலி மாசு, 89 டெசிபெல்லாக அதிகரித்து உள்ளது. கடந்தாண்டு 777 ஆக இருந்த காற்றின் மாசு, 114 ஆக குறைந்து உள்ளது.

சென்னை சவுகார்பேட்டையில் 114 பி.பி.எம். என்ற அளவில் காற்றுமாசு இருந்தது- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காற்றுமாசு அளவு 100 பி.பி.எம். என கூறி உள்ளது.

தீபாவளி அன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து குதூகலமாக கொண்டாடினர். வெடித்த பட்டாசுகளின் காகிதங்கள், அட்டை பெட்டிகள் சாலைகள், தெருக்களில் சிதறிக் கிடந்தன.

சென்னையில் அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த 11 மணி நேரத்தில் சுமார் 40 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டன. 200 வார்டுகளில் இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்தாண்டை காட்டிலும் 40 டன் அளவுக்கு பட்டாசு குப்பைகள் குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயிக்கப்பட்டதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 

Next Story