மெரினாவில் விபசார அழகி கொலை: ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது பரபரப்பு வாக்குமூலம்


மெரினாவில் விபசார அழகி கொலை: ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 7 Nov 2018 9:30 PM GMT (Updated: 7 Nov 2018 6:40 PM GMT)

மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவர் நண்பருடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

சென்னை மெரினாவில் நீச்சல்குளம் பின்புறம் உள்ள கடற்கரை மணலில் கடந்த 4-ந்தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு மணலுக்குள் புதைக்கப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி அண்ணாசதுக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் மதுரையை சேர்ந்த கலைச்செல்வி (வயது 40) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் மோகன்குமார் என்ற பிரேம் (27) என்பவரையும், அவரது நண்பர் சூர்யா என்ற பத்மநாபன் (23) என்பவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து கலைச்செல்வியை கொலை செய்து கடற்கரை மணலில் புதைத்தது தெரியவந்தது.

அதன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கொலையாளி பிரேம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள குட்டுபட்டு கிராமத்தை சேர்ந்தவர். சென்னை திருவல்லிக்கேணியில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார். கைதான அவரது நண்பர் சூர்யா பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். கலைச்செல்வியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கொலையாளி பிரேம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் விபசார தொழில் செய்வார்கள். நானும், சூர்யாவும் அவர்களை அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்போம்.

இந்தநிலையில் மதுரையை சேர்ந்த விபசார அழகி கலைச்செல்வி மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரத்தில் புதிதாக விபசாரம் செய்ய தொடங்கினார்.

நாங்கள் கலைச்செல்வியை சந்தித்தும் உல்லாசம் அனுபவித்தோம். கலைச்செல்வி வந்ததால் பல்லவன் சாலை பகுதியை சேர்ந்த 2 பெண்களுக்கும் விபசார தொழில் பாதிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் எங்களிடம் சண்டை போட்டார்கள். கலைச்செல்வியை சந்திக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.

சம்பவத்தன்று இரவு நாங்கள் கலைச்செல்வியை சந்தித்தோம். அவரிடம் உல்லாசமாக இருந்தோம். அப்போது நாங்கள் போதையில் இருந்தோம். இனிமேல், ‘மெரினாவில் நீ விபசாரம் செய்யக்கூடாது’ என்று கலைச்செல்வியை மிரட்டினோம். ஆனால் கலைச்செல்வி மறுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கலைச்செல்வியை தீர்த்துக்கட்டிவிட்டு அவரது உடலை கடற்கரை மணலில் புதைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டோம்.

இவ்வாறு பிரேம் தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story