ஒருதலைக்காதலால் விபரீதம்: ஏரியில் குதித்து நர்சு தற்கொலை வாலிபர் கைது


ஒருதலைக்காதலால் விபரீதம்: ஏரியில் குதித்து நர்சு தற்கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 8:36 PM GMT)

வேலூர் அருகே ஒரு தலைக்காதலால் ஏரியில் குதித்து நர்சு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

வேலூரை அடுத்த கீழ்மொணவூரை சேர்ந்தவர் கதிரேசன் என்ற ஆட்டோ டிரைவரின் மனைவி அனிதா (வயது 28), வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அனிதா நேற்று முன்தினம் காலை சதுப்பேரி ஏரியில் பிணமாக மிதந்தார்.

தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனிதாவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டன.

இது குறித்து அனிதாவின் கணவர் கதிரேசன் போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மனைவியை அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) கடத்தி கொலை செய்திருக்கலாம் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை

விசாரணையில், அனிதா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அனிதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அஜித்குமாருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனிதா சகஜமாக நேரிலும், செல்போனிலும் அஜித்குமாருடன் பேசி வந்துள்ளார்.

அனிதா அடிக்கடி செல்போனில் பேசியதை பார்த்த கணவர் கதிரேசன் அவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் தீபாவளியன்று மாலை அனிதா தனது குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு நடந்து சென்றார்.

ஒருதலைக்காதல்

அப்போது அங்கு வந்த அஜித்குமார், அவரை வழிமறித்து தன்னுடன் பேச மறுப்பது குறித்து கேட்டுள்ளார். மேலும் அனிதாவை ஒருதலையாக காதலித்து வருவதாகவும், தன்னை காதலிக்கும்படியும் வற்புறுத்தி உள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், அனிதாவை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அனிதா விரக்தி அடைந்தார். அஜித்குமாருடன் பேசுவது குறித்து கணவர் சந்தேகம் அடைந்ததாலும், அஜித்குமார் காதலிக்கும்படி வற்புறுத்தியதாலும் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் குழந்தைகளை தனது அக்காள் வீட்டில் விட்டு விட்டு, வீட்டிற்கு செல்வதாக கூறி சதுப்பேரி ஏரிக்கு சென்று அதில் குதித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வாலிபர் கைது

இந்த சம்பவத்தில் அனிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து வாலிபர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Next Story